"தப்பு பண்ணிட்டேங்க.." தவறை ஒப்புக்கொண்டு பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ரிஷி சுனக்.. எதற்காக தெரியுமா?
லண்டன்: இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் காரில் சீட் பெல்ட் அணியாததால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில் தனது தவறை ஒப்புக்கொண்ட ரிஷி சுனக் இதற்காக பகிரங்கமாக மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
இங்கிலாந்து பிரதமராக கடந்த அக்டோபர் மாதம் ரிஷி சுனக் பதவியேற்றார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரபல தொழிலதிபர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருகமனும் ஆவார்.
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பாகவே சில சர்ச்சைகளில் சிக்கினார். எனினும், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோரின் கடும் எதிர்ப்பையும் மீறி இங்கிலாந்து பிரதமர் பதவியை ரிஷி சுனக் அலங்கரித்தார்.

சீட் பெல்ட் அணியாமல் இருந்த ரிஷி சுனக்
பதவியேற்றது முதல் தனது பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் ரிஷி சுனக் தற்போது காரில் சீட் பெல்ட் அணியவில்லை என்ற சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். காரில் சென்று கொண்டிருந்த போது சிறிய வீடியோ கிளிப்பில் ரிஷி சுனக் உரையாற்றும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது வீடியோவில் பேசுவதற்காக ரிஷி சுனக் தனது சீட் பெல்ட்டை அகற்றிவிட்டு பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இங்கிலாந்தில் காரில் பயணம் செய்யும் பயணிகள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்ற விதி அமலில் உள்ளது.

பிரதமரே விதியை மீறியதாக விமர்சனம்
இப்படி இருக்கையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் விதிகளை மீறியிருப்பதாக ரிஷி சுனக் மீது விமர்சனங்கள் பாய்ந்தன. நாட்டில் 100 க்கும் மேற்பட்ட திட்டங்கள் குறித்தும் தனது அரசாங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் விளக்கி பேசும் வகையில் இந்த வீடியோ படமாக்கப்பட்ட போதுதான் ரிஷி சுனக் இவ்வாறு சீட் பெல்ட் அணியாமல் இருந்துள்ளார். ரிஷி சுனக் பேசும் வீடியோவில் அவர் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

எதிர்க்கட்சியும் சாடல்
ரிஷி சுனக் காருக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்பு வீரர்கள் மோட்டோர் சைக்கிளில் அணிவகுத்தனர். உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமரே இப்படி விதிகளை மீறி செயல்படலாமா? என்ற ரீதியில் ரிஷி சுனக் மீது விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக இந்த விவகாரத்தை பிடித்துக்கொண்ட இங்கிலாந்து எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, ரிஷி சுனக்கை கடுமையாக சாடியது. அண்மையில் காண்டாக்ட்லெஸ் கார்டு மூலமாக பணத்தை செலுத்த முடியாமல் ரிஷி சுனக் தடுமாறிய நிலையில் தற்போது இந்த சம்பவமும் நடைபெற்றுள்ளது என்று சாடியிருந்தது.

மன்னிப்பு கோரிய ரிஷி சுனக்
இந்த நிலையில், தனது தவறை பிரதமர் ரிஷி சுனக் ஒப்புக்கொண்டதாகவும் அதற்காக மன்னிப்பு கோரியதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தியதாகவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இங்கிலாந்தில் மருத்துவ காரணங்களுக்காக பெறும் விதி விலக்குகள் மற்றும் அவசர சேவை வாகனங்களை தவிர ஏனைய அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது. சீட் பெல்ட் அணியாவிட்டால் 100 பவுண்டுகள் ஸ்பாட் பைனாக விதிக்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். நீதிமன்றத்திற்கு சென்றால் 500 பவுண்டுகள் வரை அபராத தொகை உயரும்.












Click it and Unblock the Notifications