உ.பி.யில் யோகி அரசுக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்களே தர்ணா.. 100 பேர் சட்டசபையில் போராட்டம்.. ஏன்?
லக்னோ: உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சிக்கு எதிராக பாஜக எம்எல்ஏக்களே சட்டசபையில் தர்ணா போராட்டம் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில் லோனி தொகுதியின் எம்.எல்.ஏ. கிஷோர் குர்ஜார். இவர் மீது அதே பகுதியை சேர்ந்த அரசு உணவு ஆய்வாளர் அசுதேஷ் சிங் போலீசில் புகார் அளித்து இருந்தார். தன்னை குர்ஜார் தங்கிவிட்டார், தன்னுடைய குடும்பத்தை குர்ஜார் மிரட்டுகிறார் என்று அசுதேஷ் புகார் அளித்து இருந்தார்.
இதனால் காசியாபாத் போலீசில் குர்ஜாருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டு இருந்தது. அதேபோல் பாஜகவின் உத்தர பிரதேச தலைமையும் குர்ஜாரிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்டு இருந்தது. ஆனால் இன்னும் குர்ஜார் இதற்கு விளக்கம் அளிக்கவில்லை.
என்ன நடந்தது
இந்த நிலையில் கடந்த 16ம் தேதி உத்தர பிரதேசத்தில் சட்டசபை கூட்டத் தொடர் துவங்கியது. அப்போது அவைக்கு வந்த குர்ஜார், தன் மீது சுமத்தப்பட்டு இருக்கும் புகார் குறித்து விளக்கம் அளிக்க அனுமதி கேட்டார். ஆனால் சபாநாயகர் ஹரினிடே நரேன் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. பாஜகவின் கொறடாவும் குர்ஜாரை அமரும் படி கூறினார்.
தர்ணா செய்தார்
இதனால் கோபம் அடைந்த குர்ஜார் பாஜக கட்சிக்கு எதிராக தர்ணா செய்ய தொடங்கினார். அவர் போராட தொடங்கியதும் வரிசையாக பாஜக எம்எல்ஏக்கள் பலர் வந்து போராட்டம் செய்தனர். மொத்தம் 66 பாஜக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக சட்டசபையில் போராட்டம் செய்தனர்.
மொத்தம் எத்தனை
மொத்தம் 102 எம்எல்ஏக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பல கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இதில் போராட்டம் செய்தனர். ஒரு எம்எல்ஏ மீது தவறாக புகார் வைக்கப்படுகிறது. அவருக்கு தன் தரப்பு நியாயத்தை சொல்ல கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான் நாங்கள் போராடுகிறோம். இந்த அரசு சொந்த கட்சியினருக்கு கூட பாதுகாப்பு அளிப்பது இல்லை, என்று அவர்கள் கூறினார்கள்.
எத்தனை மணி நேரம்
அன்று அவையில் சுமார் 2 மணி நேரம் எல்லோரும் போராட்டம் செய்தனர். அதன்பின் அம்மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா, குர்ஜாரிடம் தனியாக பேசி சமாதானம் செய்தார். இந்த புகார் தொடர்பாக விசாரிப்பேன் என்று உறுதி அளித்தார். இதையடுத்து குர்ஜார் தனது போராட்டத்தை வாபஸ் வாங்கினார்.
என்ன வாபஸ்
ஆனால் இவர்கள் மீண்டும் அவையில் எப்போது வேண்டுமானாலும் போராட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் பாஜக கட்சிக்குள் நிறைய குழப்பம் நிலவுகிறது. பலர் அங்கு யோகி ஆதித்யநாத் அரசை எதிர்க்கிறார்கள். அதன் தொடக்கம்தான் இந்த போராட்டம் என்று கூறுகிறார்கள்.
வழக்கு
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக உறுப்பினர் குல்தீப் செங்காருக்கு எதிராக இரண்டு நாட்களுக்கு முன்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது . அவருக்கு இன்னும் தண்டனை அளிக்கப்படவில்லை. இந்த பிரச்சனையும் பாஜக கட்சிக்குள் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.