ஜஸ்ட் 17 நிமிஷத்தில் நடந்த குவிக் கல்யாணம்.. மாமியாரிடம் நூதன வரதட்சணை கேட்ட மாப்பிள்ளை..!
17 நிமிடத்தில் நடந்து முடிந்துள்ளது ஒரு திருமணம்
லக்னோ: வெறும் 17 நிமிஷத்தில் ஒரு கல்யாணம் நடந்து முடிந்துள்ளது.. அதைவிட, மாப்பிள்ளை மாமியாரிடம் கேட்ட நூதன வரதட்சணையும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, பல்வேறு தரப்பினர் மணமக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகிறார்கள்.
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக தீவிரமெடுத்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தற்போது நாட்டின் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், கல்யாணம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், விழாக்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.. குறைந்த எண்ணிக்கையில் கல்யாணங்களை நடத்தி கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அதன்படியே மக்கள் நடந்து கொண்டும் வருகின்றனர்.
சடங்கு
அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு திருமணம் வியப்பை தந்து வருகிறது.. பொதுவாக, இந்து திருமணம் என்றால் நிறைய சடங்குகள், சாஸ்திரங்கள் உண்டு.. குறைந்தது 3 நாட்களாவது கல்யாணத்தை நடத்துவார்கள்.. ஆனால், சாஜன்பூர் பகுதியில் திருமண சடங்குகளை வெறும் 17 நிமிடங்களில் நடத்தியுள்ளனர்
17 நிமிடங்கள்
பாட்னா தேவி கோவிலில் திருமணம் நடந்துள்ளது.. புஷ்பேந்திர துபே - ப்ரீத்தி திவாரி ஆகியோர்தான் மணமக்கள்.. இவர்கள் வீட்டில் இருந்து ஒருசிலரே திருமணத்தில் பங்கேற்றுள்ளனர்.. எல்லாரும் சேர்ந்து அந்த கோவிலை 7 முறை சுற்றி வந்து 17 நிமிடங்களில் திருமணத்தை முடித்துள்ளனர்..
வரதட்சணை
மேளதாளம் இல்லை.. ஊர்வலம் இல்லை.. பூஜைகள் இல்லை.. தொற்று அதிகமாக இருப்பதால், எந்த சாங்கியமும் வேண்டாம் என்று மாப்பிள்ளை சொல்லிவிட்டாராம். அதற்கு பதிலாக, மாமியாரிடம் நூதன வரதட்சணையாக ராமாயணம் புத்தகம் வேண்டும் என்று கேட்டாராம்.. இதைக் கேட்டு பெண் வீட்டில் ஆச்சரியப்பட்டார்களாம்.
பாராட்டு
தேவையற்ற செலவுகளை தவிர்த்து, வரதட்சணையும் வாங்காமல், கொரோனா விதிகளையும் பின்பற்றி நடந்த இந்த திருமணம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.. மணமக்களுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்..!