சிறுமியை வன்கொடுமை செய்த கொடூரம்.. கர்ப்பமானவரை உயிருடன் எரித்து கொலை.. உ.பியில் அதிர்ச்சி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இதனை தடுக்கும் பொறுப்பில் உள்ள காவல்துறையும் மெத்தன போக்காக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டியுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள்
உலக நாடுகள் பலவற்றில் நிறம், பொருளாதார பாகுபாடுகளுடன் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்தியாவில் இவற்றுடன் சாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடுகளுக்கு எதிராகவும் மக்கள் போராடி வருகின்றனர். இவ்வாறு இருக்க பெண்கள் இவையெல்லாவற்றுடனும் சேர்த்து பாலின பாகுபாட்டுடனும் போராடி வருகின்றனர். இந்தியாவின் வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

உயிருடன் எரித்து கொலை
இவ்வாறு இருக்கும் நிலையில் மேலே குறிப்பிடத்தைப் போல, இந்த வன்கொடுமையிலிருந்து மக்களை காக்கும் அரணாக விளங்கும் காவல்துறையும் தொடர்ந்து மெத்தன போக்கை கடைப்பிடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள குராவலி பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

திருமணம்
குராவலி பகுதியில் வசித்து வந்த சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். ஆனால் சிறுமி இதனை மறுத்தார். நாளடைவில் சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து மருத்து மருத்துவ பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஊர் பஞ்சாயத்தில் இந்த விசயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்த நபர்தான் சிறுமியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பஞ்சாயத்தில் தீர்ப்பாகியுள்ளது.

வழக்குப்பதிவு
இதனையடுத்து குற்றவாளியின் குடும்பத்தினர் சிறுமியை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளனர். பயங்கர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளிகள் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது. சம்பவத்தையடுத்து குற்றவாளிகள் தலைமறைவாகியுள்ளனர் என்றும், விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாது, கர்ப்பமாக இருந்த அச்சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications