உ.பி. சட்டசபை தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில் பாஜக வெல்லும்... அமித்ஷா ஆரூடம்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெறுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பவுண்டரி அடிப்போம்
இருந்தபோதும் உ.பி.யில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. Kasganj என்ற இடத்தில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: 2014, 2017, 2019 என 3 தேர்தல்களில் அடுத்தடுத்து உ.பி.யில் பாஜக வெற்றி வாகை சூடியது. 2022 சட்டசபை தேர்தலிலும் பாஜக பவுண்டரி அடிக்கும் விதமாக வெற்றியைப் பெறும்.

300 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்
உ.பி.யில் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக இந்த முறையும் நிச்சயம் கைப்பற்றும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் ஜாதிய, குடும்ப அரசியலை மேற்கொள்கின்றனர். 2017-ல் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைவதற்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடந்தது. யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைத்ததும் கிரிமினல்கள் மாநிலத்தைவிட்டே தப்பி ஓடிவிட்டனர். முந்தைய ஆட்சிக் காலங்களில் பள்ளிக்கூடத்துக்கு மகள்களை பெற்றோர்கள் அனுப்பவே அச்சப்பட்டனர். ஆனால் யோகி ஆதித்யநாத் ஆட்சி அமைந்த உடன் குண்டர்கள் உ.பி.யைவிட்டே வெளியேறி ஓடிவிட்டனர்.

எதிர்க்கட்சிகள் மீது பாய்ச்சல்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமஜென்ம பூமி இயக்கம் நடத்தப்பட்ட போது தம்முடைய முதல்வர் பதவியையே விட்டுக் கொடுத்தவர் பாஜகவின் கல்யாண்சிங். அகிலேஷ் யாதவ் மீண்டும் ஆட்சிக்கு வந்து ராமர் கோவில் கட்டுமானத்தை தடுக்க வேண்டும்; முடக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்கு உ.பி. வாக்காளர்கள் அனுமதித்துவிடக் கூடாது. நாடு விடுதலைக்குப் பிறகு உ.பி.யை தங்களது சொந்த சொத்தாகவே காங்கிரஸ் மாற்றிவிட்டது.

பாகிஸ்தானும் தீவிரவாதிகளும்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இப்போதெல்லாம் ரொம்பவே கோபப்படுகிறார். முத்தலாக் முறைக்கு பிரதமர் மோடி முடிவு கட்டினார். பிரதமர் மோடியின் இந்த முடிவை அகிலேஷ் யாதவ் எதிர்க்கிறாரா? சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆட்சி காலங்களில் தீவிரவாதிகள் ஊடுருவி நமது ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். பாஜக ஆட்சி அமைத்த போது ஊரி, புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ஆனால் பாகிஸ்தான் நடப்பது பாஜக ஆட்சி என்பதை மறந்துவிட்டது. நாட்டின் பிரதமர் மவுன பாபா அல்ல.. நரேந்திர மோடி. அதனால் உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications