பயங்கர சத்தம்.. தகர்ந்த சுவர்! சிறுவன் பரிதாப பலி - வெடித்தது குண்டு அல்ல.. LED டிவி - உபியில் பரபர
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எல்.இ.டி. டிவி வெடித்துச் சிதறியதில் அதை பார்த்துக்கொண்டிருந்த 16 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில ஆண்டுகளாகவே செல்போன், எலெக்ட்ரிக் பைக் ஆகியவை வெடித்து அதை பயன்படுத்துபவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் முதல் முறையாக எல்.இ.டி. தொலைக்காட்சி வெடித்து சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஓமேந்திரா. இவர் தன்னுடைய வீட்டில் உள்ள எல்.இ.டி. டிவியை குடும்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த டிவி வெடித்துச் சிதறி இருக்கிறது.
கொடூரம்! சிறுமிக்கு வெறும் 6 வயசு தான்.. பலாத்காரம் செய்த 10 வயது சிறுவன்! வெலவெலத்து போன பொதுமக்கள்
4 பேர் படுகாயம்
சத்தம் கேட்ட அண்டை வீட்டார் அங்கு ஓடி வந்து பார்த்தபோது தொலைக்காட்சி வெடித்து 4 பேர் படுகாயமடைந்தது தெரியவந்தது. தொலைக்காட்சியின் சிதறிய துண்டுகள் எதிரில் இருந்த சிறுவன் ஓமேந்திரா மீது பாய்ந்துள்ளன. அவரது கண், முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் தொலைக்காட்சியின் துண்டுகள் குத்தி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுவன் பலி
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஓமேந்திராவின் தாய், அவரது நண்பர் கரண் ஆகியோரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகர்ந்த சுவர்
தொலைக்காட்சி வெடித்த போது, அது மாட்டி வைக்கப்பட்டிருந்த சுவரும் தகர்ந்து இருக்கிறது. ஓமேந்திரா வீட்டில் பலத்த வெடித்த சத்தம் கேட்டு புகை வந்ததால் சிலிண்டர் வெடித்துவிட்டது என்று தாங்கள் நினைத்ததாக அண்டை வீட்டில் வசித்து வந்த வினிதா என்ற பெண் தெரிவித்து உள்ளார்.
அதிர்ந்த வீடு
இதுகுறித்து சிறுவன் ஓமேந்திராவின் உறவினர் மோனிகா கூறுகையில், "நாங்கள் வேறொரு அறையில் இருந்தபோது. அப்போது தொலைக்காட்சி வெடித்தது. இது மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பாக அது இருந்தது. எங்கள் ஒட்டுமொத்த வீடும் இதனால் அதிர்ந்தது. தொலைக்காட்சி மாட்டப்பட்டு இருந்த சுவற்றின் ஒருபகுதி தகர்ந்துவிட்டது." என்றார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து காசியாபாத் போலீஸ் அதிகாரி ஞானேந்திர சிங் தெரிவிக்கையில், "2 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் தொலைக்காட்சி வெடிப்பில் படுகாயமடைந்தனர். ஒரு சிறுவன் மட்டும் உயிரிழந்துவிட்டார். ஆரம்பக்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கிறோம்." என்றார்.
மின்வாரியமே காரணம்
அதிக வோல்டேஜ் காரணமாக டிவி வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், எங்கள் வீடுகளில் கூடுதல் மற்றும் குறைவான வால்டேஜ் மாற்றம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மின்வாரியமே இதுபோன்ற வழக்குகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.