உபி-ஐ அதிரவைத்த விவசாயிகள் உயிரிழப்பு.. அமைச்சர் மகன் கைது செய்ய தாமதம் ஏன்? பகீர் கிளப்பும் போலீஸ்
லக்னோ: உத்தரப் பிரதேச விவசாயிகள் போராட்டம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்து 24 மணி நேரம் ஆன பிறகும் கூட அமைச்சரின் மகனைக் கைது செய்யாதது ஏன் என்பது குறித்து போலீசார் உயர் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்
லக்கிம்பூர் கெரி சம்பவத்தில் விவசாயிகளைப் படுகொலை செய்த குற்றத்தில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
முதல் தகவல் அறிக்கையில் ஆஷிஷின் பெயர் சேர்க்கப்பட்டு 24 மணி நேரம் ஆன பின்பும் அவர் கைது செய்யப்படவில்லை. இது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில், உத்தரப்பிரதேச காவல்துறையின் உயர்மட்ட அதிகாரி இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

உடலை எரியூட்டுவதில் பிஸி
லக்னோ மண்டலத்தின் கூடுதல் காவல் துறை இயக்குநர் எஸ்என் சபாத் இதுகுறித்து கூறுகையில், "நாங்கள் முதலில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் பிஸியாக இருந்தோம். உடற்கூறாய்வு மற்றும் இறுதிச் சடங்கு செய்து உடலை எரியூட்டுவது போன்றவற்றை மேற்கொள்வதில் மும்மரமாக இருந்தோம். ஒவ்வொரு வழக்கிலும் ஒவ்வொரு மாதிரியான செயல்முறையை நாங்கள் பின்பற்றுகிறோம், இந்த வழக்கை நாங்கள் முழுமையாக விசாரிப்போம்" என்றார்.

போலீஸ் வழக்குப்பதிவு
உயர்மட்ட பதவியில் இருக்கும் ஒரு நபர் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாதவராக இருந்திருந்தால் உங்களின் செயல்பாடுகள் இதேபோல் இருந்திருக்குமா எனச் செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "பாதிக்கப்பட்டவரைக் கருத்தில் கொண்டே எங்கள் அணுகுமுறை அமையுமே தவிரக் குற்றம் சாட்டப்பட்டவரைப் பொருத்து அல்ல" எனப் பதிலளித்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர் பல கேள்விகள் எழுப்பி இருந்த போதிலும் அவர் அதற்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். முதல் தகவல் அறிக்கையில், அலட்சியப்போக்கு காரணமாகக் கொலை நடைபெற்றுள்ளது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஷிஸ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் அஜய் மிஸ்ரா
லக்கிம்பூர் கெரி அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா, பாஜக தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பங்கேற்கச் சென்றபோது அவர்களுக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர். அப்போது விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. துணை முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். வாகனம் கூட்டத்திற்குள் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர்.

வீடியோ விளக்கம்
கார் விவசாயிகளை மோதுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ உண்மையானதா அல்லது பொய்யானதா என்பது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, விபத்து நடைபெற்றதாகவும் ஆனால், கார் தவறுதலாகக் கவிழ்ந்ததாகவும் கூறியுள்ளார். அந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் காரின் மீது கற்களை வீசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். துப்பாக்கி குண்டுபோட்டு உயிரிழந்த விவசாயிகளில் ஒருவருக்கு மீண்டும் உடற்கூறு ஆய்வு நடத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மரணமடைந்த மற்ற மூவரின் உடல் தகனம் செய்யப்பட்ட போதிலும் அவரின் உடலுக்கு மட்டும் இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்படவில்லை.












Click it and Unblock the Notifications