இந்த உணவை நாய் கூட சாப்பிடாது.. சீறிய உ.பி போலீஸ்! தூக்கி அடித்த யோகி.. குட்டு வைத்த உயர் நீதிமன்றம்
லக்னோ: எங்களுக்கு வழங்கப்படும் உணவை நாய் கூட சாப்பிடாது எனக் கூறிய உத்தரபிரதேசத்தை சேரந்த காவலரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. பிறப்பித்த உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
காவல்துறையினருக்கு வழங்கப்படும் உணவை பொதுவெளியில் விமர்சித்ததன் காரணமாகவே, தான் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறிய நிலையில், அந்த உத்தரவை நீதிமன்றம் நிறுத்தி வைத்ததது.
மேலும், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு பிரோஸாபாத் எஸ்பி, உத்தரபிரதேச காவல்துறை டிஜிபி ஆகியோருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"நாய்கள் கூட சாப்பிடாது"
உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத்தில் காவல்துறையினருக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக போலீஸ் கேண்டீன் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான போலீஸாருக்கு உணவு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கேண்டினில் வழங்கப்படும் உணவு மிகவும் மோசமாக இருப்பதாக கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் மனோஜ் குமார் என்ற காவலர் வீடியோ வெளியிட்டார். அதில், கையில் உணவு தட்டை ஏந்தியபடி கதறி அழுத மனோஜ் குமார், "எங்களுக்கு வழங்கப்படும் உணவை நாய்கள் கூட சாப்பிடாது" என அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ உத்தரபிரதேசம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக மாறியது.
"பண மோசடி நடக்கிறது"
மேலும், அந்த வீடியோவில் காவல்துறையினருக்கு உணவு வழங்குவதற்கு பல கோடி ரூபாயை உத்தரபிரேதச அரசு ஒதுக்குவதாகவும், ஆனால் ஃபிரோஸாபாத் எஸ்பியும், துணை ஆணையரும் அந்த பணத்தை மோசடி செய்கிறார்கள் எனவும் காவலர் மனோஜ் குமார் வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார். இதன் தொடர்ச்சியாக, இந்த புகார் மீது விசாரணை நடத்துமாறு உ.பி. டிஜிபி உத்தரவிட்டார்.
பணியிடமாற்றம்
இதையடுத்து, இதுதொடர்பான விசாரணை நடத்திய ஃபிரோஸாபாத் காவல் உயரதிகாரிகள், உணவு குறித்து அறிக்கை அளிக்காமல் புகார் அளித்த காவலர் மனோஜ் குமார் குறித்து அறிக்கை அளித்தனர். அதில், காவலர் மனோஜ் குமார் ஒழுங்கீனமானவர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், மனோஜ் குமாரை ஃபிரோஸாபாத்தில் இருந்து காஸிபூருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
நிறுத்தி வைத்து உத்தரவு
இந்நிலையில், தன்னை பணியிடமாற்றம் செய்ததற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனோஜ் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது நேற்று முன்தினம் நீதிபதி பங்கஜ் பாதியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவலர் மனோஜ் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "போலீஸ் கேண்டீனில் தரக்குறைவான உணவு வழங்கப்படுவதாக புகார் அளித்த காரணத்தாலேயே மனோஜ் குமார் மாற்றம் செய்யப்படுவதாக வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த பணியிட ஆணை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், மனுதாரரின் புகாருக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு ஃபிரோபாத் எஸ்பி மற்றும் உ.பி. டிஜிபி ஆகியோருக்கும் நோட்டீஸ் பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.