கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியில்லை...உத்தரபிரதேசத்திலும் வார இறுதி நாட்களில் லாக்டவுன்
உத்தர பிரதேசத்தில் வரும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை வாரஇறுதி லாக்டவுன் விதிக்கப்படும் என முதல்வர் யோகி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 23ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வார இறுதி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நம நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ளது. உத்தர பிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று 29,754 புதிய கோவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 162 பேர் மரணமடைந்துள்ளனர். மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமையன்று லக்னோ உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 7 நாட்கள் லாக்டவுன் விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் லாக்டவுன் விதிக்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மாநில அரசு உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடையை பெற்றுள்ளது.
மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்தால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார். கடுமையான உத்தரவுகள் பிறப்பித்தும் அந்த உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்படுகின்றனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு வார இறுதி நாட்களில் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வார இறுதி லாக்டவுன் விதிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தர பிரதேச உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவானிஷ் அவஸ்தி , ஏப்ரல் 23ம் தேதி முதல் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வார இறுதி லாக்டவுன் விதிக்கப்படும் என்பதை உறுதி செய்தார். மேலும் லாக்டவுன் காலத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.