உத்தரபிரதேசத்தில் சட்டசபைத் தேர்தலை நடத்தலாமா? தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூன்று நாட்கள் ஆய்வு
தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரப் பிரதேசத்துக்கு சென்று அங்கு தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். இதே போன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவத்தினரிடமும் தேர்த
லாக்னௌ: இந்தியாவில் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தலைமையில் அதிகாரிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகளும் விதித்து வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
ஓமிக்ரான் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு பிரதமர் மோடி தடை விதிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ் தெரிவித்திருந்தார்.

5 மாநில சட்டசபைத் தேர்தல்
இந்தியாவைப் பொறுத்தளவில் ஓமிக்ரான் பாதிப்பு 570 கடந்துவிட்டது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 167 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களில் ஓமிக்ரான் பாதிப்பு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக சுகாதாரத் துறை வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். இதனால் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், மற்றும் உத்தராகண்ட் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணையம் ஆலோசனை
5 மாநில சட்டசபைத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் பல கட்ட ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளனர். மிக முக்கியமாக நேற்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் உடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் போடப்பட்டுள்ள தடுப்பூசி விபரம், நோய் பரவல், பாதிப்பு உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பெற்றுக் கொண்டார்கள்.

தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முன்னுரிமை அளித்து தடுப்பூசி பணிகளை அதிகரிக்குமாறு சுகாதாரத் துறையிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மிக விரைவாக 100% வேக்சின் என்ற இலக்கை அடைய ஏதுவாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகமாக மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சகத்தைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

அதிகாரிகள் நேரில் ஆய்வு
அடுத்த கட்ட நடவடிக்கையாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தரப் பிரதேசத்துக்கு இன்று வந்து அங்கு தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள். இதே போன்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவத்தினரிடமும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தேர்தல் தள்ளிப்போகுமா
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரவு நேரங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டாலும் சட்டசபைத் தேர்தலையொட்டி பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் ஓமிக்ரான் காரணமாக 5 மாநில சட்டசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாது என்றே அரசியல்கட்சித்தலைவர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications