குண்டர் சட்டத்தில் கைதான பாஜக பிரமுகருக்கு ஜாமீன்! உ.பி நிர்வாகிகள் மாலை அணிவித்து அமோக வரவேற்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெண்மீது தாக்குதல் நடத்திய குற்றத்தில் குண்டர் சடத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஜக முன்னாள் பிரமுகர் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு தடபுடலான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய நிலையில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

சர்ச்சை
கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 'கிராண்ட் மேக்ஸ் சொசைட்டி' குடியிருப்பில் ஒரு சர்ச்சை வெடித்தது. அதாவது இந்த குடியிருப்பில் வசித்து வந்த பாஜக பிரமுகர் (இப்போது கட்சியில் இல்லையென சொல்லப்படுகிறது) ஸ்ரீகாந்த் தியாகி மரக்கன்று நடுவதற்கு முயற்சித்தார். ஆனால் அதற்கு அதே குடியிருப்பில் வசித்து வந்த பெண்மணி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக உருவானது. மோதலில் தியாகி அப்பெண்ணை தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின.

கைது
இதனையடுத்து தியாகி மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அவரது ஆதரவாளர்கள் இதனையறிந்து சம்பந்தப்பட்ட பெண்மணியின் வீட்டின் முன்னர் நின்று பிரச்னை செய்துள்ளனர். இவர்களை உடனடியாக கைது செய்த காவல்துறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது. இவ்வாறு இருக்கையில் தியாகி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் தியாகி திடீரென தலைமறைவாகிவிட்டார். பின்னர் ஓரிரு நாட்களில் அவரை கைது செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.

வரவேற்பு
சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிறையிலிருந்து தற்போது தியாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். ஜாமீன் கோரி விண்ணப்பதிருந்த தியாகியின் வழக்கறிஞர், காவல்துறை போட்டி காரணமாக இவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது என்று கூறி வாதாடினார். இவரின் வாதங்களை ஏற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம் தியாகிக்கு ஜாமீன் வழங்கியது. இதனையடுத்து அவர் நேற்றிரவு சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்தார். விடுதலையானதையடுத்து தியாகிக்கு பட்டாசு வெடித்து மாலை அணிவித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பு
இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவருக்கு இவ்வாறு வரவேற்பளிப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தனது விடுதலை குறித்து கூறிய தியாகி, "மக்கள் எனக்கும் எனது குடும்பத்திற்கும் ஆதரவாக இருக்கின்றனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லாவற்றிற்கும் மேலானது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications