கரும்பு அரசியல்.. கறையும் பாஜக.. உத்தரப்பிரதேசத்தில் பக்காவாக கணக்குத்தீர்க்கிறார்களா விவசாயிகள்?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கரும்பு விவசாயிகள், பாஜக-வுக்கு தொடர்ந்து கருப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இதனால் 50 தொகுதிகளில் பாஜக பின்னடைவை சந்திக்கும் என்று கருதப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து பல மாநிலங்களில் இந்த போராட்டத்தின் நீட்சியாக விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டத்தை மேற்கொண்டனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உத்தரப்பிரதேசத்திலுள்ள முசாபர்நகரிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தினர். மகா பஞ்சாயத்து' என்ற பெயரிலான போராட்டம் யோகி அரசை ஆதிரவைத்தது.
நெய்வேலி நிலக்கரி சுரங்க நிர்வாகம் தமிழர்களை வஞ்சிக்கிறது! - தமிழ்தேசிய பேரியக்கம் கண்டனம்!
உத்தரப்பிரதேசம்
தேர்தலைக் கருத்தில் கொண்டு விவசாயிகளை அழைத்துப்பேசியது உத்தரப்பிரதேச அரசு. விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும், மின் கட்டண பாக்கி வைத்துள்ள விவசாயிகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது, கரும்புக்கான விலையை உயர்த்தியதுடன், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பாக்கித்தொகை முழுவதையும் யோகி அரசு பட்டுவாடா செய்வதாக அறிவித்தது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.
எதிர்ப்பு
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் யோகி அரசுக்கு எதிராகப் பிரசாரத்தை முன்னெடுப்போம் என்று விவசாயிகள் அறிவித்தனர். லக்னோவை டெல்லியாக மாற்றுவோம்' என்று அறிவித்திருக்கும் அவர்கள், யோகி அரசை அகற்றுவோம்' என்ற முழக்கத்தை எழுப்பு கடந்த ஆண்டு முதல் யோகி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல்
இந்நிலையில், உத்தரப்பிரதேச தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரங்கள் களைகட்டத் தொடங்கியிருக்கின்றன. இந்நிலையில் வாக்கு கேட்டு வரும் பாஜக வேட்பாளர்களை ஊருக்குள் விடாமல், கருப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள் கரும்பு விவசாயிகள். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள் பாஜக வேட்பாளர்கள்.
பாஜக-வுக்கு தலைவலி
மேற்கு உத்தரப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 50-க்கும் அதிகமான தொகுதிகளில் இந்த கரும்பு பிரச்சனையால் பாஜக-வுக்கு தற்போது தலைவலியாக மாறியுள்ளது. 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தலில் முதல் இரண்டு கட்டத்தேர்தல் பாஜக-வுக்கு பின்னடைவாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுபோன்ற விஷயங்கள் தேர்தல் சமயத்தில் நல்லதல்ல என்று பாஜகவை எச்சரித்திருக்கிறது மேலிடம்.
கரும்பு
உத்தரப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 119 கரும்பு மில் செயல்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு 465.3 லட்சம் டன் அளவு கரும்பை விவசாயிகளிடம் இருந்து வாங்கி இருக்கிறது மில் கூட்டமைப்பு. கரும்பை விவசாயிகளிடம் வாங்கியதற்காக 70% பணத்தை மட்டுமே கொடுத்திருக்குறது. இன்னும் 1500 கோடி ரூபாய் விவசாயிகள் தரப்புக்கு வரவேண்டும். ஆனால் மில் நிர்வாகங்கள் கொடுக்காமல் இருக்கிறது. அரசுத்தரப்பில் இருந்து மில் நிர்வாகங்களுக்கு வரும் பணம் சரியாகவே வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு வர வேண்டிய பணம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் இதுபோல இழுத்தடிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர்.
பிரசாரம்
உத்தரப்பிரதேச கரும்பு மந்திரி சுரேஷ் ராணா ஷாம்லி தொகுதியின் சட்டசபை உறுப்பினர். அமைச்சர் உட்பட அதே பகுதியில் இன்னும் சில எம்.எல்.ஏ-க்கள் பிரசாரம் செய்ய தொகுதிக்கு சென்றுள்ளர். ஆனால் அவர்கள் யாரையும் கரும்பு விவசாயிகள் ஊருக்குள் விடவில்லை. பாஜகவை சேர்ந்த யாராவது பிரசாரம் செய்ய வந்தாலும், அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டி திருப்பி அனுப்புகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் உத்தரப்பிரதேசத்தில் அடிக்கடி நடந்து வருகிறது.
Recommended Video
தற்கொலை
இதற்கு காரணம் ராஷ்ட்ரிய லோக் தளம் தான் என்று அந்தக் கட்சியினர் மீது பாஜக புகார் கொடுத்துள்ளது. விவசாயிகளிடமிருந்து வாங்கும் கரும்புகளுக்கான தொகையை சர்க்கரை ஆலைகள் திருப்பிக் கொடுக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் எடுத்துக் கொள்கின்றனர். எனவே, உள்ளூர் வெல்ல உற்பத்தியாளர்களிடம் கரும்பை குறைந்த விலைக்கு விற்கும் நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் விவசாயிகள். இதனால் பல கரும்பு விவசாயிகள் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துள்ளனர்.