உடலில் இருந்து தலை துண்டாக விருப்பமா? காளி ஆவணப்பட போஸ்டரால் லீனா மணிமேகலைக்கு சாமியார் மிரட்டல்
லக்னோ
லக்னோ: காளி ஆவணப்படம் தொடர்பான போஸ்டர் விவகாரத்தில், ‛‛உடலில் இருந்து தலை துண்டாக விரும்புகிறீர்களா?'' என லீனா மணிமேகலைக்கு அயோத்தி சாமியார் ராஜூ தாஸ் மகாந்த் மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் லீனா மணிமேகலை. இவர் இவர் ஆவணப்படங்களை இயக்கி வருகிறார். இவர் காளி குறித்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார். இது ‛ஆகா கான்' அருங்காட்சியகத்தில் வெளியானது.
இந்நிலையில் படத்தின் போஸ்டரை லீனா மணிமேகலை வெளியிட்டு இருந்தார். அதில், காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போலவும், ஓரினச்சேர்க்கையாளர்களின் வானவில் கொடியை கையில் ஏந்தியிருப்பது போன்றும் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காளி போஸ்டரால் வழக்குப்பதிவு
இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்து கடவுளை லீனா மணிமேகலை அவமரியாதை செய்துள்ளதோடு, இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டார் என எதிர்ப்புகள் கிளம்பின. மேலும் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.லீனா மணிகேமலை மீது டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் லீனா மணிமேகலைக்கு எதிராக புகார்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்பேரில் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சாமியார் மிரட்டல் வீடியோ
இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஹனுமான் கோவிலில் சாமியார் ராஜூ தாஸ் மகாந்த் என்பவர் லீனா மணிமேகலையை மிரட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:

உடலில் இருந்து தலையை பிரிக்கணுமா...
சமீபத்திய நிகழ்வுகளை பாருங்கள். நுபுர் சர்மா சரியான விஷயங்களை கூறியபோதும் அவரது கருத்து என்பது இந்தியா, உலகம் முழுவதும் நெருப்பை கிளப்பி உள்ளது. ஆனால் நீங்கள் சனாதன தர்மத்தை அவமதிக்க விரும்புகிறீர்களா?. உங்கள் தலையை உடலிலிருந்து பிரிக்க விரும்புகிறீர்களா?. இதுதான் உங்களுக்கு வேண்டும்?. இந்த விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சகர் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு படத்துக்கு தடை விதிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் கடினமான சூழல் ஏற்படுத்தப்படும்'' என கூறியுள்ளார்.
Recommended Video

ஆதரவும், எதிர்ப்பும்
இந்த போஸ்டர் விவகாரம் தற்போது இந்தியாவில் பெரும் விவாதப்பொருளான நிலையில் லீனா மணிமேகலைக்கு ஆதரவாகவும் எதிராகவும், அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான மஹுவா மொய்த்ரா, ‛‛என்னை பொறுத்தவரை காளி என்பவர் இறைச்சி, மதுபானத்தை ஏற்றுக்கொள்ளும் தெய்வம்'' என கூறி லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதுஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு மாஜி பொதுச்செயலாளர் ஷரத் சுக்லா, ‛‛இந்த படத்தை தடை செய்ய வேண்டும். இதுபோன்ற வலைத் தொடர்கள் மற்றும் ஆவணப்படங்களைத் தயாரிப்பவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்'' என கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications