பயிற்சியுடன் கல்வீச்சுக்கு ரூ.500.. பெட்ரோல் குண்டுக்கு ரூ.5000.. உபி வன்முறை பற்றி எஸ்ஐடி அறிக்கை
லக்னோ: நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு ஒருவார பயிற்சியுடன் கல்வீச்சுக்கு ரூ.500, பெட்ரோல் குண்டு வீச்சுக்கு ரூ.5000 வழங்குவதாக கூறப்பட்டுள்ளது என எஸ்ஐடி சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா மே மாத இறுதியில் டிவி விவாதத்தில் சர்ச்சையாக பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் மக்கள் மட்டுமின்றி, கத்தார், சவுதி அரேபியா உள்பட பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்பு கிளம்பின.

உத்தர பிரதேசத்தில் வன்முறை
நுபுர் சர்மாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என இந்தியாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. உத்தர பிரதேச மாநிலத்தில் கான்பூர், சாரன்பூர், பிரக்யராஜ், ஹத்ராஸ், மொரடாபாத், அம்பேத்கர் நகர், பெரோடாபாத் உள்பட பல இடங்களில் ஜூன் மாத துவக்கத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த போராட்டம் திடீரென்று வன்முறையானது.

கல்வீச்சு -தீவைப்பு
வன்முறையின்போது கற்கள் வீசப்பட்டது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதோடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையின்போது சில இடங்களில் சிறுவர்கள் போலீசார் மீது கல்வீசி தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கைது-வீடுகள் இடிப்பு
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் வன்முறைக்கு காரணமானவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. கான்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 60க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எஸ்ஐடி அறிக்கை
இந்நிலையில் தான் ஜூன் 3ல் கான்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‛‛வன்முறையை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிலருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. கல்வீச்சில் ஈடுபடுபட்டவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.1000ம், பெட்ரோல் குண்டு வீசியவர்களுக்கு ரூ.5000ம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு இலவச சட்ட உதவியும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக வன்முறை தொடர்பாக 7 நாள் முதல் 9 நாள் வரை பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications