லக்கிம்பூர் விவசாயிகள் கொலை.. மத்திய இணையமைச்சர் மகன் ஆஷிஷ் விரைவில் கைது - லக்னோ ஐஜி தகவல்
லக்னோ: லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆஷிஷ் மிஸ்ராவை தேடிக்கொண்டு இருக்கிறோம், விரைவில் அவரை கைது செய்வோம், அவருக்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று லக்னோ ஐஜி லட்சுமி சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தின் போது 9 பேர் கொல்லப்பட்டனர். இங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷின் ஜீப் விவசாயிகள் மீது ஏறியதில் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பலர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் புகார் வைக்கப்பட்டது.
9 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மீது எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

பேட்டி
இது தொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் அஜய் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதியது தன்னுடைய மகனின் கார் என்று ஒப்புக்கொண்டார். ஆனால் அந்த காரில் தன்னுடைய மகன் இல்லை என்று அஜய் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த பகுதியில் இருந்த விவசாயிகளோ.. காரில் ஆஷிஸ் இருந்ததை பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எப்ஐஆர்
ஆஷிஷ் மிஸ்ராவிற்கு எதிராக பதியப்பட்ட எப்ஐஆரில் இருந்த தகவலின்படி ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் அவருடைய ஆட்கள் காரில் வந்து விவசாயிகள் மீது மோதி உள்ளனர். அவர்கள் வந்த 3 கார்களில் மொத்தம் 20 பேர் வரை இருந்தனர். கார் வேகமாக வந்ததில் விவசாயிகள் கொல்லப்பட்டனர். காரில் ஆஷிஷ் மிஸ்ரா இருந்தார் என்று சாட்சியங்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்ஐஆரில் இந்த விவரங்கள் விரிவாக தரப்பட்டுள்ளன.

ஆஷிஷ் மிஸ்ரா
அதோடு ஆஷிஷ் மிஸ்ராவுடன் வந்த மோனு மிஸ்ரா என்பவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் பலர் பலியானார்கள். இவர் ஆஷிஷ் மிஸ்ரா வந்த ஜீப்பில் இடதுபக்கம் அமர்ந்து இருந்தார் என்று சாட்சியங்களின் அடிப்படையில் எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஆஷிஷ் மிஸ்ரா மீதும், அவருடன் வந்தவர்கள் மீதும் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Recommended Video

மோனு மிஸ்ரா
இது தொடர்பாக லக்னோ ஐஜி லட்சுமி சிங் அளித்த பேட்டியில், ஆஷிஷ் மிஸ்ராவை தேடிக்கொண்டு இருக்கிறோம். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. விரைவில் அவரை கைது செய்வோம். அவர் கார் விவசாயிகள் மீது ஏறியதற்கான வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த வீடியோ ஆதாரங்களை சோதனை செய்து வருகிறோம்

கைது
இந்த வீடியோக்கள் மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சம்பவம் நடந்த போது நான் அந்த காரிலேயே இல்லை என்று ஆஷிஷ் மிஸ்ரா குறித்து இருந்தார். பன்வாரிப்பூர் பகுதியில் நடந்த கட்சி விழாவில் இருந்தேன். நாள் முழுக்க அங்குதான் இருந்தேன். எனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது என்று ஆஷிஷ் மிஸ்ரா குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications