மோடி, யோகி அரசு நகரங்களை மட்டுமல்ல.. கிராமங்களையும் மேம்படுத்தும்- பெருமிதமாக பேசிய பிரதமர்
லக்னோ: ‛‛இந்த மோடியும், யோகியும் நகரங்களை மட்டுமல்ல கிராமங்களுக்கும் வளர்ச்சி பணிகளை கொண்டு சென்று மேம்படுத்துவார்கள்'' என பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக கூறினார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பந்தேல்கண்ட் எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி 2020ல் அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் என்பது சித்ரகூட் மாவட்டத்தில் இருந்து எட்டாவா மாவட்டத்தை இணைக்கும்.
மேலும் 7 மாவட்டங்களை ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையுடன் சந்திக்க வைக்கும். உத்தர பிரதேச விரைவு சாலைகள் தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இந்த சாலை பணி துவங்கியது.

திறந்து வைத்த பிரதமர் மோடி
ரூ.14,850 கோடி செலவில் 296 கிலோமீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலையாக இந்த சாலை திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியானது வெறும் 28 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாலையை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ஜாலன் நகரில் நடந்த விழாவில் ரிமோட் பட்டனை அழுத்தி பிரதமர் நரேந்திர மோடி புதிய சாலையை திறந்து வைத்தார். விழாவில் முதல்வர் யோகி ஆதித்யாநாத் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். விழாவில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

2 முக்கிய விஷயங்கள்
தற்போது திறக்கப்பட்ட இந்த சாலையானது பொருளாதாரத்தை மேம்படுத்தும், சுயவேலைவாய்ப்பு உள்பட பிற வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கும். ஒரு மாநிலத்தில் 2 முக்கிய விஷயங்கள் சரிசெய்யப்பட வேண்டும். ஒன்று சட்டம் ஒழுங்கு, இன்னொரு இணைப்பு சாலைகள். இவை இரண்டுகள் சரிசெய்யப்பட்டு விட்டால் முரண்பாடுகளுக்கு எதிராக மாநிலம் போராட முடியும். நாங்கள் இந்த இரண்டையும் மேம்படுத்துகிறோம்.

இது மோடி.. யோகி ஆட்சி
சட்டம்-ஒழுங்கு மேம்பட்டுள்ளது. நகரங்கள் இணைப்பும் நடந்துள்ளது. இந்த விரைவு(எக்ஸ்பிரஸ்) சாலையானது இந்த பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சியை அபரிமிதமாக்கும். ஏனென்றால் இது மோடி, யோகியின் அரசு. நாங்கள் நகரங்களுக்கு மட்டுமின்றி கிராமங்களுக்கும் வளர்ச்சியை எடுத்து செல்வோம்'' என்றார்.

காங்கிரஸ் மீது விமர்சனம்
மேலும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‛‛ஒருகாலத்தில் சர்யு கால்வாய் திட்டத்தை முடிக்க 40 ஆண்டுகள் ஆனது. கோரக்பூர் உர ஆலைக்கு 30 ஆண்டுகள் எடுத்து கொள்ளப்பட்டது. அர்ஜுன் அணை திட்டம் 12 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. அமேதி துப்பாக்கி தொழிற்சாலை என்பது வெறும் போர்டு அளவில் மட்டுமே இருந்தது. ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் இப்போதுதான் பெட்டிகளுக்கு வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது.

உள்கட்டமைப்பு மேம்பாடு
உத்தர பிரதேசத்தை பொறுத்தமட்டில் உள்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம் பிற மாநிலங்களை காட்டிலும் தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது'' என்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் யோகி ஆதித்யந்தாத் நன்றி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications