மாடுகளின் உயிரை பறித்து வரும் தோல் கழலை நோய்க்கு உள்நாட்டிலேயே தடுப்பூசி.. பிரதமர் மோடி தகவல்
லக்னோ: வடமாநிலங்களில் பரவி வரும் தோல் கழலை நோயினால் கொத்து கொத்தாக மாடுகள் பலியாகி வரும் நிலையில், தோல் கழலை நோய்க்கு உள்நாட்டிலேயே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் மோடி தெரிவித்துள்ளார்.
தோல் கழலை நோய் அல்லது லம்பி தோல் நோய் (எல்.எஸ்.டி) என்பது கால்நடைகளை தாக்கும் ஒரு வைரஸ் நோயாகும்.
குறிப்பாக மாடுகளை தாக்கும் இந்த வைரஸ் நோய், நாளடைவில் மாடுகளின் உயிரையே பறித்து விடுகிறது.

தோல் கழலை நோய்
தண்ணீர் மற்றும் கழிவு நீர் மூலம் மாடுகளுக்கு பரவும் இந்த வைரஸ் நோய், தொடர்ந்து மாடுகளின் தோல் பகுதிகளை தாக்குகிறது. இதனால் மாடுகளுக்கு தீவிர காய்ச்சல் ஏற்படுதல், வளர்ச்சி குறைதல், சினை பிடிக்காமல் போவது என ஆரம்பத்தில் இதன் தாக்கம் இருக்கும். நீண்ட நாட்கள் இந்த வைரசால் பாதிக்கப்படும் மாடுகள் உயிரிழக்கவும் நேரிடும். பல கோடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு மாடுகள் உதவி வருவதால், இந்நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

5 ஆயிரம் மாடுகள் உயிரிழப்பு
சமீபத்தில் கூட இந்த நோய் தாக்கத்தால் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் மாடுகள் கொத்து கொத்தாக உயிரிழந்தன. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக கடந்த ஏப்ரல் மாதம் இந்த நோய் மாடுகள் மத்தியில் பரவியதாகவும் கூறப்பட்டது. எதிர்ப்பு சக்தி குறைந்த கால்நடைகளின் உயிரை குடிக்கும் இந்த நோயால், ராஜஸ்தானில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு லட்சம் மாடுகளுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் கூறப்பட்டது.

பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இதனால் ராஜஸ்தான் அரசு, மத்திய அரசின் உதவியையும் நாடியது. அதேபோல் குஜராத்திலும் தோல் கழலை நோயால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மாடுகளுக்கு இடையே பரவும் இந்த நோய் பரவலை தடுக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோய்க்கு தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் தயாரித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலேயே தடுப்பூசி
சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பு உலக பால் பொருட்களின் உச்சி மாநாடு உத்தர பிரதேசத்தில் உள்ள இந்திய எக்ஸ்போ மையத்தில் நடைபெறுகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் கழலை நோய்க்கு தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் தயாரித்துள்ளதாக கூறியுள்ளார்.

8 கோடி மக்களின் வாழ்வாதாரம்
இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய்க்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட தடுப்பூசியை நமது விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். மாநில அரசுகளுடன் இணைந்து தோல் கழலை நோயை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 8 கோடி மக்களின் வாழ்வாதாரமாக இந்த துறை உள்ளது. பால் பண்ணை தொழிலில் பெண்கள் தலைமை வகிக்கின்றனர்'' இவ்வாறு அவர் கூறினார்.

தடுப்பூசிகள் போடப்படும்
மேலும் அவர் கூறுகையில், 'உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. உலகின் மற்ற வளர்ந்த நாடுகளை போல இல்லாமல் பால் உற்பத்தி துறையில் உந்து சக்தியாக விவசாயிகள் உள்ளனர். எனவே 2025 ஆம் ஆண்டுக்குள் 100 சதவீதம் கால்நடைகளுக்கு புரூசெல்லா மற்றும் கோமாரி நோய்களுக்கான தடுப்பூசிகள் போடப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications