பாஜகவும் காங்கிரஸும் ஒன்றே- ராகுல் யாத்திரைக்கு யாரும் கூப்பிடவே இல்லை: போட்டுத் தாக்கிய அகிலேஷ்!
லக்னோ: பாஜகவும் காங்கிரஸும் ஒன்றுதான்; ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் இணைய வேண்டும் என யாரும் அழைப்பு அனுப்பவில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாக சாடி உள்ளார். ராகுல் காந்தியின் 2-வது கட்ட யாத்திரை உ.பி., பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறது.
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7-ல் தொடங்கிய இந்த நடைபயணம் தற்போது டெல்லியை சென்றடைந்துள்ளது.

ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையில் இணைந்து கொள்ள பல்வேறு மாநிலங்களின் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவது வழக்கம். இந்த அழைப்பை ஏற்று அரசியல் கட்சித் தலைவர்களும் பலரும் ராகுல் யாத்திரையில் இணைந்து வருகின்றனர்.
டெல்லி யாத்திரையில் திமுக எம்பி கனிமொழி, மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன் எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் ராகுல் காந்தியுடன் அவரது இல்லத்தில் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். தற்போது ராகுல் பாதயாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக ராகுல் யாத்திரை அடுத்த வாரம் தொடங்க உள்ளது.
2-வது கட்ட ராகுல் யாத்திரை, உபி, பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்ல இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களான அகிலேஷ், மாயாவதி உள்ளிட்டோருக்கு ராகுல் காந்தி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது; ஆனால் இந்த அழைப்பை அகிலேஷ், மாயாவதி நிராகரித்துவிட்டனர் என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இது தொடர்பாக இன்று லக்னோவில் செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் விளக்கம் அளித்தார். அப்போது, எங்களது சமாஜ்வாதி கட்சிக்கு தனி சித்தாந்தம் உள்ளது. பாஜக, காங்கிரஸ் இரண்டும் ஒன்றுதான். ஒரே கொள்கை உடையவைதான். எங்களுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. உங்களது மொபைலில் அந்த அழைப்பிதழ் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள் என்றார் அகிலேஷ்.
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 2 இடங்கள்தான். ஆனால் சமாஜ்வாதி கட்சிதான் பிரதான எதிர்க்கட்சி. மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசை காப்பாற்றியதில் சமாஜ்வாதி கட்சிக்கு முக்கிய பங்கு உண்டு. காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் பல தேர்தல்களில் கூட்டணி அமைத்திருக்கின்றன. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸுக்கு சமாஜ்வாதி கட்சியின் தயவு தேவைப்படுகிறது. ஆனால் சமாஜ்வாதி கட்சியோ காங்கிரஸை பொருட்டாகவே மதிக்கவே இல்லை என்பதையே அகிலேஷின் இந்த பேட்டி வெளிப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications