கொடுமை.. பச்சை குத்திக்கொண்ட 2 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி தொற்று.. உ.பி.யில் ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில், சமீபத்தில் பச்சை குத்திக்கொண்ட இருவருக்கு எச்ஐவி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் பச்சைக் குத்திக்கொண்ட இவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை வாரனாசி மருத்துவமனை உறுதி செய்துள்ளதாக அம்மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி பினய் சிங் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இதுவரை எந்த அறுவை சிகிச்சைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை. மட்டுமல்லாது, பாதுகாப்பற்ற எந்த உடலுறவிலும் ஈடுபட்டிருக்கவில்லை என தெரிவித்திருந்த நிலையில் சமீபத்தில் பச்சை குத்திக்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

உலக நிலவரம்
உலகம் முழுவதும் கொடிய நோய்களில் வேகமாக பரவும் பட்டியலில் எச்ஐவி முதன்மையாக உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இது தற்போது வரை 3.84 கோடி மக்களை பாதித்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டில் மட்டும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 6.5 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் இந்த தொற்றை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட நாடுகள் தொடர்ந்து முயன்று வந்தாலும் இது மெல்ல பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய நிலவரம்
இந்நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 17 லட்சம் பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020-2021ல் மட்டும் சுமார் 85,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தமாக 23,18,737 இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருடன் வாழ்ந்து வருகின்றனர். இதில் 81,430 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொற்று பாதிப்பில் உத்தரப் பிரதேச மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இம்மாநிலத்தில் மேலும் இருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம்
மருத்துவர்கள் வெளியிட்ட தகவலின்படி இம்மாநிலத்தை சேர்ந்த 20 வயதான இளைஞர் ஒருவர் சமீபத்தில் பச்சை குத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து சில நாட்களாக அவருக்கு அதீத உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. தீவிரமான காய்ச்சல் காரணமாக மருந்து எடுத்துள்ளார். ஆனால் அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை. இதனையடுத்து அவருக்கு எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் விசாரித்ததில் இதற்கு முன்னர் அவர் யாருடனும் உடல் சம்பந்தப்பட்ட தொடர்பில் இருந்ததில்லை என்று கூறியுள்ளார். ஆனால் சில நாட்களுக்கு முன்னர்தான் பச்சை குத்தியுள்ளதை மருத்துவர்கள் கவனித்துள்ளனர்.

'டாட்டூ'
இதேபோல மாநிலத்தின் மற்றொரு பகுதியிலும் இளம்பெண் ஒருவர் இதேபோல சில நாட்களுக்கு முன்னர் பச்சை குத்தியுள்ளார். இதனையடுத்து இவரும் தீவிர உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இவருக்கும் எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் இருவருக்கும் பச்சை குத்த பயன்படுத்தப்படும் ஊசி மூலம் தொற்று பாதிப்பு பரவியுள்ளது என தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனையின் நோயெதிர்ப்பு துறை மூத்த மருத்துவர் பிரீத்தி அகர்வால் தெரிவித்துள்ளார்.

பரவல் முறை
பொதுவாக பச்சை குத்த பயன்படுத்தப்படும் ஊசிகள் விலையுயர்ந்தவை. எனவே ஒவ்வொருவருக்கும் தனித்தனி ஊசிகளை பயன்படுத்துவதனால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க சிலர் ஒரே ஊசியை பலருக்கு பயன்படுத்தி வருகின்றனர். பச்சை குத்திக்கொள்பவர்கள் இதன் பின்னால் இப்படி ஒரு ஆபத்து இருக்கிறது என்பதை உணருவதில்லை. பச்சை குத்திக்கொள்ளும் முன்னர் கடைக்காரர் புதிய ஊசியைத்தான் பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையெனில் ஏற்கெனவே எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர் பச்சை குத்திக்கொண்ட ஊசி இதர வாடிக்கையாளர்களுக்கும் பயன்படுத்தப்படும். இது எச்ஐவியை பரப்பும்.
அதேபோல புதிதாக பச்சைக் குத்திக்கொண்டவர்கள் எச்ஐவி பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதனால் தொற்று பாதிப்பு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications