பார்க்க என்ன மாதிரியே இருக்கான்! கோபத்தில் கொடூரமாக கொன்ற ரவுடி.. சினிமா பாணியில் போட்ட ஸ்கெட்ச்!
லக்னோ: தன்னை போலவே இருந்த காரணத்தால் ஒரு நபரை ரவுடி ஒருவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பாணியில் பக்காவாக 'ஸ்கெட்ச்' போட்டு நிகழ்த்தப்பட்ட இந்த சம்பவம் போலீஸாரையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒரு தடயம் மட்டும் கிடைக்காவிட்டால், அந்த ரவுடியின் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறி இருக்கும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மனிதனாக மாற்றிய குழந்தை..
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் ஃபிரோஸ் அகமது (45). பயங்கர ரவுடியாக வலம் வந்த இவர் மீது 10-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், 20-க்கும் மேற்பட்ட ஆள் கடத்தல் வழக்குகளும் உள்ளன. இந்த சூழலில்தான், கடந்த ஆண்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. திருமணமாகியும் ரவுடி தொழிலை விடாத ஃபிரோஸுக்கு, அவரது குழந்தையை பார்த்ததும் நீண்டநாள் அதனுடன் வாழ வேண்டும் என்ற ஆசை வந்தது. மிருகமாக இருந்த ஃபிரோஸுக்குள் மனிதத்தன்மை எட்டிப் பார்த்தது.

உயிர் பயம்..
ஆனால், கத்தி எடுத்தவனை பகையும், போலீஸும் சும்மா விட்டுவிடுமா என்ன? ஃபிரோஸை போட்டுத்தள்ள எதிரிகள் கழுகை போல காத்துக் கொண்டிருந்தனர். அதுவரை உயிர் பயம் இல்லாமல் இருந்த ஃபிரோஸுக்கு முதன்முறையாக உயிர் மீது ஆசை வந்துள்ளது. தனக்கு ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் தனது குழந்தை அநாதையாகி விடுமே என்ற பயமும் அவருக்கு வந்துள்ளது. எனவே தனது ரவுடியிஸத்தை அடியோடு நிறுத்தியுள்ளார். ஆனால், போலீஸாரோ எங்கு என்ன கொலை நடந்தாலும் ஃபிரோஸை பிடித்துச் செல்ல தொடங்கினர்.

பக்கா ஸ்கெட்ச்..
இதனிடையே, அண்மையில் ஒரு கொலை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஃபிரோஸ், எதிரிகளிடம் இருந்து உயிரை காப்பாற்றவும், போலீஸின் தொந்தரவில் இருந்து தப்பிக்கவும் ஒரு யோசனை செய்தார். அதன்படி, தன்னை போலவே இருக்கும் ஒரு நபரை கொலை செய்து, அது தாம் தான் என போலீஸாரை நம்ப வைத்துவிட்டால் குடும்பத்துடன் வேறு எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள்ளலாம். கடைசியாக இந்த ஒரு கொலையுடன் முடித்துக் கொள்ளலாம் என ஸ்கெட்ச் போட்டார் ஃபிரோஸ். தன்னை போல இருக்கும் நபரை தேடி அலைய தொடங்கினார்.

கொடூரக் கொலை..
அதன்படி, தன்னை போலவே இருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் குப்தாவை பார்த்ததும், அவரை தீர்த்துக்கட்டி விட முடிவு செய்தார் ஃபிரோஸ். எனவே அவருடன் நெருங்கி பழகினார் ஃபிரோஸ். பின்னர் கடந்த மாதம் 17-ம் தேதி ஊருக்கு ஒதுக்குப்புறமாக சுராஜ் குப்தாவை அழைத்துச் சென்ற ஃபிரோஸ், அவரை வெட்டிக் கொலை செய்தார். எதிரிகள் கொன்றது போல இருக்க வேண்டும் என்பதற்காக அவரை கொடூரமாக வெட்டி, அவரது பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்தார் ஃபிரோஸ். பின்னர் தனது சட்டை, தங்கச்சங்கிலி, செல்போன் ஆகியவற்றை அந்த குப்தாவின் உடலின் மீது போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

காட்டிக் கொடுத்த தடயம்..
இந்நிலையில், குப்தாவின் உடலை மீட்டு விசாரணை நடத்திய போலீஸார், முதலில் அவரை ஃபிரோஸ் என்றே நினைத்தனர். ஆனால், குப்தாவின் பேண்ட் பாக்கெட்டுக்குள் ஒரு டைரி பாதி எரிந்த நிலையில் இருந்தது. அதை பார்த்து அதில் உள்ள தொலைப்பேசி எண்களை அழைத்த போதுதான், அது ஃபிரோஸ் இல்லை என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அதே சமயத்தில், ஃபிரோஸும் காணாமல் போயிருந்ததால் அவர்தான் இவரை கொலை செய்திருப்பார் என முடிவுக்கு வந்த போலீஸார், நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர். விசாரணையில், குப்தாவை கொலை செய்ததை ஃபிரோஸும் ஒப்புக்கொண்டார்.












Click it and Unblock the Notifications