ஒரே குழப்பம்! 3 நாளாக எங்கும் செல்லாமல்.. மடத்திலேயே முடங்கிய ஆதித்யநாத்? என்ன நடக்கிறது உ.பியில்?
லக்னோ: உத்தர பிரதேச தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் 3 நாளாக யோகி ஆதித்யநாத் கோரக்பூர் மடத்திலேயே உள்ளார். மேலிட அதிருப்தியால் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்த மாநிலத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது.
பங்குனி பவுர்ணமியில் தெப்ப உற்வசவம் - திருப்பதியில் 5 நாட்கள் ஆர்ஜித சேவைகள் ரத்து
நாளை ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் போட்டியில் உள்ளன.
300 இடங்களில் பாஜக
மார்ச் 7ல் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு நடந்தது. அன்று மாலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த கருத்து கணிப்புகள் பாஜக தான் உத்தர பிரதேசத்தில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என கூறின. 280 முதல் 300க்கும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் என கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
எதிரொலிக்கவில்லை
மாநிலத்தில் நிலவும் விவசாயிகள் பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கால்நடை பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடு, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடி என எதுவும் தேர்தலில் எதிரொலிக்கவில்லை. இல்லாவிட்டால் இந்துத்துவா கொள்கையில் இந்த பிரச்சனைகள் மறைந்திருக்கும் என்பதை கருத்து கணிப்புகள் கூறின. இதனால் பாஜக மேலிடம், தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
மடத்தில் யோகி
இந்நிலையில் தான் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பதற்றமாகவும், சோர்வாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இறுதிக்கட்ட தேர்தலுக்கு பின் நிருபர்களை சந்தித்த அவர் நேரிடையாக கோரக்பூரில் உள்ள மடத்துக்கு சென்றார். இன்று 3வது நாளாக மடத்திலேயே யோகி ஆதித்யநாத் உள்ளார். அவர் யாரிடமும் பேச ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
மேலிடம் மீது அதிருப்தி
இதற்கு பாஜக மேலிடத்தின் நடவடிக்கை தான் காரணம் என அக்கட்சியினர் நம்புகின்றனர். அவர்கள் கூறுகையில், ‛உத்தர பிரதேசத்தில் பூர்வாஞ்சல் என்பது யோகி ஆதித்யநாத்தின் கோட்டை. ஆனால் தேர்தலுக்காக டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட போஸ்டர்களில் யோகி ஆதித்யநாத்தின் படங்கள் இல்லை. இது யோகி ஆதித்யநாத்தின் கோரக்பூர் தொகுதியிலும் எதிரொலித்தது. பிரதமர் நரேந்திர மோடியின் படங்கள் மட்டுமே இருந்தன. இதுபற்றி கேட்டபோது யோகி ஆதித்யநாத்தின் தேர்தல் செலவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் வெறும் சமாளிக்கும் பதில் என்பதால் யோகி ஆதித்யநாத் அதிருப்தி அடைந்துள்ளார்'' என்றனர்.
ஒதுக்கி வைக்கப்பட்டார்
மேலும் மடத்தின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், ‛‛பூர்வாஞ்சல் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்களில் இருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒதுக்கி வைக்கப்பட்டார். மார்ச் 5ல் திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பும் மார்ச் 7 ல் தான் நடந்தது. அதன்பிறகு மடத்துக்கு வந்தவர் இன்னும் வெளியே செல்லவில்லை'' என்றனர்.
செல்வாக்கு தலைவராக...
இதன் பின்னணிக்கும் காரணம் ஒன்று கூறப்படுகிறது. அதாவது உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் செல்வாக்கு மிக்க தலைவராக வலம் வருகிறார். இது பாஜகவில் சிலருக்கு பிடிக்கவில்லை. இதனால் யோகி ஆதித்யநாத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர். இந்நிலையில் தான் போஸ்டரில் அவரது முகம் இடம்பெறவில்லை. இது யோகி ஆதித்யநாத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், ‛‛உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால் பிரதமர் நரேந்திர மோடியை மட்டும் காரணமாக கூறிவிட முடியாது. பாஜகவில் 2ம் இடத்தில் யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அவருக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டும் '' என கூறினர். இதுவும் புகைச்சலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
யோகிக்கு எதிர்ப்பு
இந்நிலையில் தான் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பாஜகவின் ராஜ்யசபா எம்பி ஒருவர் தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில், ‛‛பாஜகவில் தலைவர்களை பொறுத்தமட்டில் முதல், இரண்டு என படிநிலைகள் எதுவும் இல்லை. அனைவரும் தொண்டர்களே'' என கூறினார். இதன்மூலம் பாஜகவில் செல்வாக்கான தலைவராக 2வது இடத்தில் யோகி ஆதித்யநாத் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுவதற்கு அவர் எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
2வது முறையாக முதல்வரா
இதன்மூலம் உத்தரபிரதேச பாஜகவில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுகையில், ‛‛ தற்போதைய சூழலில் யோகி ஆதித்யநாத் 2வது முறையாக முதல்வராக வரக்கூடாது என பாஜகவில் சிலர் நினைக்கின்றனர். அதற்கு பதிலாக வேறு நபரை அந்த பதவியில் அமர்த்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் இது சாதாரண விஷயமல்ல. உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகள் குறைந்தால் இது சாத்தியம். மாறாக கருத்து கணிப்பு முடிவுகள் உண்மையானால் யோகி ஆதித்யநாத்தை முதல்வராக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் பாஜகவுக்கு ஏற்படும்'' என்றனர்.