மனைவி கோபமாக இருக்காங்க.. லீவ் தாங்க! உயரதிகாரிக்கு லெட்டர் போட்ட காவலர்.. பறந்து வந்த "பரபர" பதில்
லக்னோ: தனது புது மனைவி கோபமாக இருப்பதால் அவரை சமாதானப்படுத்த தனக்கு விடுமுறை வேண்டும் என உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ் காவலர் எழுதிய 'லீவ் லெட்டர்' தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பணியிடங்களில் பெரும்பாலானோர் உண்மையான காரணத்தை கூறி லீவ் கேட்பதில்லை. அப்படியிருக்கையில், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என உண்மை காரணத்தை கூறி லீவ் கேட்ட காவலரின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மேலும், இந்தக் கடிதத்தை மற்ற காவல் நிலையங்களுக்கும் அனுப்பிய உயரதிகாரிகள், விடுமுறைக்கு உண்மையான காரணத்தை கூறுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

புது திருமண ஜோடி
உத்தரபிரதேச மாநிலம் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுரவ் செளத்ரி. தனது சொந்த மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் கான்ஸ்டெபிள் ஆக பணிபுரிந்து வந்த இவருக்கு, கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நவ்டான்வா காவல் நிலையத்திற்கு அவர் மாற்றப்பட்டார். சொந்த ஊருக்கும் பணியிடத்திற்கும் மிகவும் தொலைவு என்பதால் இவரால் வீட்டுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

அதிரடி லீவ் லெட்டர்
புதிதாக திருமணம் ஆகி மனைவியை பிரிந்திருப்பதும் கவுரவ் செளத்ரிக்கும் சிரமமாக இருந்துள்ளது. அதேபோல, அவரது மனைவியும் கணவனை பார்க்காமல் சோகத்தில் இருந்துள்ளார். இந்த சூழலில்தான், சொந்த ஊர் செல்ல விடுமுறை கேட்டு கவுரவ் செளத்ரி தனது உயரதிகாரிக்கு லீவ் லெட்டர் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியுள்ள விஷயங்கள்தான் ஹைலைட் ஆகியிருக்கிறது.

கோபத்தில் இருக்கும் மனைவி
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பாவது: ஐயா வணக்கம், எனக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது என உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால், சிறிது நாட்களிலேயே எனக்கு பணிமாறுதல் கிடைத்து இங்கு வந்துவிட்டேன். இதனால் எனது மனைவி என் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார். கோபம் காரணமாக நான் போனில் பேசினாலும் அவர் பேச மறுக்கிறார். போனை எனது தாயாரிடம் கொடுத்துவிடுகிறார். எனது அக்காள் மகனின் பிறந்தநாளுக்காக நான் வருவதாக உறுதி அளித்துள்ளேன். ஆனால், விடுமுறை இல்லாமல் நான் அங்கு செல்ல முடியாது. நான் செல்லவில்லை என்றால் என் மனைவியை பிறகு சமாதானப்படுத்துவது கடினம். எனவே, எனக்கு சில நாட்கள் விடுமறை அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் கவுரவ் செளத்ரி கூறியுள்ளார்.

குவியும் பாராட்டு
இந்தக் கடிதத்தை பார்த்த கவுரவ் செளத்ரியின் உயரதிகாரி, அவருக்கு இன்றில் இருந்து 5 நாட்கள் விடுமுறை அளித்துள்ளார். மேலும், இந்தக் கடிதத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, சமூக வலைதளங்களில் அது வைரலாக பரவி வருகிறது. விடுமுறைக் கடிதத்தில் உண்மையான காரணத்தை கூறிய காவலர் கவுரவ் செளத்ரிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கடிதத்தை மற்ற காவல் நிலையங்களுக்கும் அனுப்பிய உயரதிகாரிகள், விடுமுறைக்கு உண்மையான காரணத்தை கூறுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications