சாதி பாகுபாடு.. தலித் இளைஞரை கட்டிவைத்து மொட்டையடித்து சித்ரவதை செய்த பாஜக பிரமுகர்.. உபி கொடூரம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் கழிவறை கோப்பையை திருடியதாக கூறி தலித் இளைஞர் தாக்கப்பட்டார். மேலும் கம்பத்தில் கட்டிவைத்து முகத்தில் கருப்பு மை ஊற்றி தலையை மொட்டையடித்து சித்ரவதை செய்யப்பட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் பாஜக பிரமுகரை போலீசார் தேடும் நிலையில் அவரது உதவியாளர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே தலித் மக்களுக்கு எதிராக குற்றங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் தற்போது திருட்டு புகார் கூறி உத்தர பிரதேச மாநிலத்தில் தலித் இளைஞர் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான விபரம் வருமாறு:

இளைஞரை தாக்கும் வீடியோ
கடந்த சில நாட்களாக இணையதளத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவில், இளைஞரை ஒரு கும்பல் கம்பத்தில் கட்டி வைத்து தாக்குகிறது. மேலும் முகத்தில் கருப்பு மை சுற்றி சித்ரவதை செய்த கும்பல், மொட்டையடித்து விடுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் இது உத்தர பிரதேசத்தில் நடந்து இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அங்குள்ள போலீசார் தீவிர விசாரணை துவங்கினர்.

தலித் இளைஞர்
இந்த விசாரணையின்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அதாவது இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலம் பாராய்ச் பகுதியில் நடந்துள்ளது. பர்க்கட்டான் பகுதியை சேர்ந்த தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். கூலித்தொழிலாளியான இவருக்கு வயது 30. இவர் கடந்த 18 ம் தேதி சாதாரணமாக நடந்து சென்றுள்ளார். அப்போது கழிவறை கோப்பை உள்ளிட்ட சில பொருட்களை ராஜேஷ் குமார் திருடியதாக சிலர் குற்றம்சாட்டினர்.

சித்ரவதை செய்து வீடியோ பதிவு
இதனை ராஜேஷ் குமார் மறுத்தார். இந்த வேளையில் பாஜக பிரமுகரான ராதேஷ்யாம் மிஸ்ரா மற்றும் அவரது உதவியாளர்கள் அவரை தாக்கி கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர். முகத்தில் கருப்பு மையை ஊற்றினர். அதோடு மட்டுமின்றி தலையில் இருந்த முடியை மொட்டையடித்து அதுதொடர்பான வீடியோவை இணையதளத்தில் பரவ விட்டுள்ளனர்.

பாஜக பிரமுகர் தலைமறைவு
இதுபற்றி பாதிக்கப்பட்ட ராஜேஷ் குமார் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரில் சாதிய பாகுபாட்டை காட்டும் வகையில் அவர்கள் சில கருத்துகளை கூறி தாக்கி அவமானப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பாஜக பிரமுகரான ராதேஷ்யாம் மிஸ்ராவின் உதவியாளர்களான ராகேஷ் திவாரி, சரோஜ் பாஜ்பாய் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக பிரமுகர் ராதேஷ்யாம் மிஸ்ரா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications