கியான்வாபி மசூதியில் சிவலிங்கம்? வழிபட அனுமதிகோரி இந்துத்துவ அமைப்பு வழக்கு.. தீர்ப்பு எப்போது?
லக்னோ: கியான்வாபி மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து அங்கு கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை வரும் நவம்பர் 14 ஆம் தேதிக்கு வாரணாசி விரைவு நீதிமன்றம் ஒத்திவைத்து இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்து இருக்கும் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீபால் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கியான்வாபி மசூதி இருக்கிறது.
கோயில் அருகே மசூதியும் அமைந்து இரு மதத்தினரும் எந்த சச்சரவுகளும் இன்றி இங்கு வழிபாடு செய்து வந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்புவரை மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக இந்த இடம் பார்க்கப்பட்டு வந்தது.
கியான்வாபி மசூதி இந்து கோயிலா? - விண்வெளி ஆய்வு - பிரதமர் அலுவலகத்திலிருந்து பறந்த உத்தரவு
பெண்கள் வழக்கு
இந்த நிலையில் கியான்வாபி மசூதியின் வளாகத்துடைய வெளிப்புறச் சுவற்றில் உள்ள சிங்கார கவுரி அம்மன் சிலைக்கு ஆண்டுக்கு 5 முறை பூஜை நடத்த அனுமதி வழங்கக்கோரி வாரணாசி நீதிமன்றத்தில் பெண்கள் 5 பேர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் கியான்வாபி மசூதியில் வீடியோ ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
ஆய்வு குழு
இதனை எதிர்த்து மசூதியை நிர்வகித்து வரும் அஞ்சுமன் இந்தஜாமியா கமிட்டி சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த மே 17 ஆம் தேதிக்குள் ஆய்வை நிறைவு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிட்டது.
உச்சநீதிமன்றம்
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்த ஆவணங்களை பார்க்காமல் கள ஆய்வுக்கு தடை விதிக்க முடியாது எனக் கூறினர்.
சிவலிங்கம்
இதனை அடுத்து 14 ஆம் தேதி மசூதியில் எதிர்ப்புகளை மீறி கள ஆய்வு தொடங்கியது. 36 பேர் 3 நாட்கள் நடத்திய ஆய்வின் முடிவில் கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற உருவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்குமாறும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தொழுகைக்கு அனுமதி
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிவலிங்கம் இருப்பதாக கூறப்பட்ட இடத்தை பாதுகாக்க உத்தரவிட்டு மசூதியில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் விஷ்வா வேதிக் சனாதன சங்கத்தின் தலைவர் ஜிதேந்திர சிங்கின் மனைவி கிரண் சிங், வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மே மாதம் ஒரு வழக்கை தொடர்ந்தார்.
சிவலிங்கத்தை வழிபட வழக்கு
அதில், "கியான்வாபி மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த தடை விதித்து, மசூதி வளாகத்தை தங்களிடம் ஒப்படைத்து, அங்கு கண்டெடுக்கப்பட்டு இருக்கும் சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்க வேண்டும் என கோரி இருக்கிறார். இதில், மசூதியில் சிவலிங்கம் என்று சொல்லப்படும் பகுதியை வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை மட்டும் நீதிமன்றம் ஏற்றது.
பள்ளிவாசல் நிர்வாகம்
ஆனால், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என பள்ளி வாசலை நிர்வகித்து வரும் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. வக்ப் வாரியத்துக்கு சொந்தமான மசூதி இடம் தொடர்பான வழக்கை வக்ப் போர்டு தீர்ப்பாயம்தான் விசாரிக்க வேண்டும் என அந்த அமைப்பு தெரிவித்தது. இடம் மசூதிக்கே சொந்தம் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் நவம்பர் 10 ஆம் தேதி மசூதியில் உள்ள சிவலிங்கம் என்று கூறப்படும் வடிவத்தை பாதுகாக்க வேண்டும் என்று வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வரு நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக வாரணாசி நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.