உத்தரப் பிரதேசத்தில் ஆறு ஆண்டுகளில் 5.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.. யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்தது. நேற்று நடந்த விழாவில் உத்தரப்பிரதேச மாநில பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற 496 பேருக்கு பணி நியமன ஆணைகளை யோகி ஆதித்யநாத் வழங்கியுள்ளார்.
உத்தரப் பிரதேச அரசியல் வரலாற்றில் யோகி ஆதித்யநாத்தை விட பல தலைவர்கள் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். ஆனால் ஒரே முறை தொடர்ந்து 6 ஆண்டுகள் வரை யாரும் முதலமைச்சராக இருந்ததில்லை. இந்த சாதனையை யோகி ஆதித்யநாத்தான் பெற்றிருக்கிறார். இந்த மார்ச் மாதத்துடன் அவர் முதலமைச்சராக பதவியேற்று 6 ஆண்டுகள் முடிவடைகிறது. எனவே இதனை அம்மாநில பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாகதான் யுபிபிஎஸ்சி தேர்வெழுதி வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சுமார் 496 பேருக்கு யோகி ஆதித்யநாத் பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, "உத்தரப் பிரதேச மாநிலத்தில் இதற்கு முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் வேலை வாய்ப்பிலும், வளர்ச்சியிலும் கவனம் செலுத்தாமல் தனி மனித வளர்ச்சியில் கவனம் செலுத்தியுள்ளனர். ஆனால் பாஜக அரசு மக்கள் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறது. அதனால்தான் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 5.5 லட்சம் இளைஞர்களக்கு பாஜக அரசு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
அதேபோல 'மிஷன் ரோஸ்கர்' திட்டத்தின் மூலம் 13 துறைகளுக்கு ஆட்கள் புதியதாக எடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க மறுபுறம் அரசு வேலைகளுக்கு 'முக்யமந்திரி அபியுதயா பயிற்சித் திட்டத்தை' நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக யுபிஎஸ்சி உள்ளிட்ட தேர்வர்களுக்கு இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த பயிற்சியில் சுமார் 43 மாணவர்கள் சேர்ந்திருந்தனர். தற்போது இந்த நிகழ்ச்சியில் இந்த 43 பேரும் பணி ஆணையை பெற்றுக்கொண்டனர். ஆகவே பயிற்சியில் சேர்ந்த அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கும் பொறுப்பை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது.
இந்த பணிகளை நமது அரசு இத்துடன் நிறுத்திவிடவில்லை தற்போது இதில் மேலும் ஒரு அடியை அரசு முன்னெடுத்து வைத்திருக்கிறது. அதாவது இ-அதியாச்சான் எனும் போர்ட்டலை இந்த நிகழ்வில் நான் தொடங்கி வைக்கிறேன். இதன் மூலம் அரசின் எந்தெந்த துறையில் காலிப்பணியிடங்கள் இருக்கின்றன? எவ்வளவு வேலை வாய்ப்பு இருக்கிறது? என்பதை இந்த போர்ட்டல் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இதற்கு முன்னர் அதாவது 6 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அடையாள நெருக்கடியை எதிர்கொண்டனர். ஆனால் இன்று மாநிலத்திலேயே புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன."
மட்டுமல்லாது இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு புதிய நம்பிக்கையை நமது மாநில இளைஞர்களுக்கு கொடுத்திருக்கிறது. தற்போது அண்டை மாநிலங்கள் பல நம்மை பார்த்து விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நாம்தான் முன்னுதாரணம். அதேபோல சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் புதிய தொழில்முனைவோர்களாக மாறியுள்ளனர். கடந்த காலங்களில் வேலை வாய்ப்புக்காக மற்ற மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் தற்போது நமது மாநிலத்திற்கு திரும்பி வருகின்றனர். இதை சாதித்தது பாஜகதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications