வளர்ச்சிக்கு தடையாக இருந்த குடும்ப அரசியலை ஒழித்தது பாஜகதான்! முதல்வர் யோகி அதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வாரிசு அரசியலை ஒழித்தது பாஜகதான் என்று முதலமைச்சர் யோகி அதித்யநாத் கூறியுள்ளார். கடந்த ஆட்சி காலத்தில் இருந்ததை விட தற்போது உத்தரப் பிரதேசம் வளர்ந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் குடும்ப அரசியல் குறித்து பேசிய அவர், "கடந்த கால ஆட்சியில் குடும்ப அரசியலின் தலையீடு அதிகமாக இருந்தது. எனவே வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்னர் மாநிலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. குடிநீரை எடுக்க மக்கள் பல கீ.மீ வரை நடந்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தது.
ஆனால் வளர்ச்சி திட்டங்களுக்கு, குடிநீர் பஞ்சத்தை போக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியானது அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்களாலும், வாரிசுகளாலும் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு சொட்டு குடிநீருக்காக அலையவிட்ட ஆட்சியாளர்களை நீங்கள் ஒரு ஓட்டிற்காக அலைய வைக்க விட வேண்டும். 2017க்கு பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக குடிநீர் பஞ்சத்தை போக்க ஏராளமான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
தற்போது வரை மாநில தலைநகரான லக்னோவில் மட்டும் சுமார் 8.7 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சம் வீடுகள் பாக்கி இருக்கின்றன. மீதமுள்ள வீடுகளுக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இதேபால மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இந்த வசதிகள் விரிவாக்கப்படும். தற்போது வரை பாஜக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம் ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர்.
அதேபோல மாநிலத்தின் புனிதத்தை பாதுகாக்க ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த புனித தலமான மா விந்தியவாசினி கோயிலை சுற்றி நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த புனித தலத்திற்கு அருகில் உள்ள ஜெட்டி அணையின் கட்டுமானங்கள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த அணையிலிருந்து வரும் நீர் வேளாண் தொழிலுக்கு மிகுந்த பலனளிக்கிறது. பாஜக ஆட்சியில்தான் இது சாத்தியமானது. வளர்ச்சிக்கு தடையாக இருந்த குடும்ப அரசியலை ஒழித்தது பாஜகதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications