சினிமாவை மிஞ்சும் அராஜகம்.. மதுரை மாணவிகளிடம் சீண்டல்!தந்தை மீது கும்பல் தாக்குதல் -6 இளைஞர்கள் கைது
மதுரை: கல்லூரி வாயிலில் நின்றுகொண்டு இருந்த மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் சூப்பர் பைக்குகளில் கும்பலாக சத்தம் எழுப்பிக்கொண்டு வந்தவர்களை கண்டித்த மாணவியின் தந்தையை கும்பலாக தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்து இருக்கின்றனர்.
நேற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் வகுப்பு முடிந்து மாணவிகள் வழக்கம்போல வெளியே சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5க்கும் மேற்பட்ட சூப்பர் பைக்குகளில் ட்ரிபிள்சில் வந்த இளைஞர்கள் மாணவிகள் அருகே சென்று அச்சுறுத்தினர்.
அதிக கூச்சல் இடுவதும், பைக் ஆக்சிலரேட்டரை முறுக்கியும், ஹாரன் அடித்தும் அதிக ஒலி எழுப்பி மாணவிகளை அச்சுறுத்தினர். இதனால் அங்கு நின்ற மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தந்தை மீது தாக்குதல்
கல்லூரியில் படித்து வந்த தனது மகளை அழைத்து செல்ல வந்த தந்தை தனி நபராக இதனை கண்டித்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள், மாணவியின் தந்தையை ஹெல்மெட்டை கொண்டு தாக்கினர். இதனை கண்ட மற்ற இளைஞர்களும் கும்பலாக சென்று அவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.

மக்கள் பதற்றம்
இந்த தாக்குதலை வெளியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மாணவிகளின் பாதுகாப்பு கருதி கல்லூரி ஆசிரியர்கள் அவர்களை கல்லூரிக்கு உள்ளே அழைத்தனர். பட்டப்பகலில் கல்லூரி வாயிலில் நடைபெற்ற இந்த கும்பல் தாக்குதல் அவ்வழியாக சென்றவர்கள் மத்தியில் பதை பதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதே கும்பல்
இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இதே கும்பல் கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று மதுரை லேடி டோக் கல்லூரிக்குள் பைக்குகளில் புகுந்து மாணவிகளை அச்சுறுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் பாதுகாப்பு
சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடைபெற்ற அந்த அராஜக செயலின் வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பலரும் இதனை பகிர்ந்து மதுரையில் ரவுடிகள் தொல்லை அதிகரித்துவிட்டதாக, மாணவிகள், பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியவில்லை எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

போலீஸ் நடவடிக்கை
இந்த நிலையில் மாணவியின் தந்தையை தாக்கிய கும்பலை சேர்ந்த 6 பேரை காவல்துறை கைது செய்து செய்து இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நேற்று 04.11.2022 ந் தேதி மாலை செந்தமிழ்பாண்டியன் என்பவர் தனது மகளை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு அழைத்துவர கல்லூரி வாசலில் நின்றுகொண்டிருந்தார்.

என்ன நடந்தது?
அப்போது ஆம்புலன்ஸ் வாகனம் பிரேதத்துடன் வந்தது. அதன் முன்புறமும் பின்புறமும் டூவீலரில் வந்த நபர்கள் அதிக ஹாரன் சத்தம் எழுப்பியபடி வந்து கல்லூரி வாசலில் நின்றிருந்த மாணவிகளை பார்த்து அதிகமாக கூச்சலிட்டு அலப்பறை செய்தனர். அதனை செந்தமிழ்பாண்டியன் ஏன் இப்படி செய்கிறீர்கள். பார்த்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

6 பேர் கைது
இதற்கு அந்த கூட்டத்தில் இருந்த மதுரை அச்சம்பத்து பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், ராமமூர்த்தி, நாகப்பிரியன் என்ற நவீன், அஜித்குமார், சோமசுந்தரம், சிவஞானம் ஆகிய ஆறு பேரும் கும்பலாக சேர்ந்து அவரை வழிமறித்து மரணத்தை உண்டு பண்ணும் விதமாக நிலைகுலையச் செய்யும்படி தாக்கினர். இதனை தொடர்ந்து அவர் தல்லாகுளம் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கும்படி புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்து ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications