ப.சிதம்பரத்திடம் கடும் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்.. என்ன நடந்தது?
மதுரை: மானாமதுரை அருகே காங்கிரஸ் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துடன் கடும் வாக்குவாதம் செய்த காங்கிரஸ் நிர்வாகி கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
மானாமதுரை அருகே வெள்ளிக் குறிச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார்.
இக் கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஸ்டாலின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி... உள்ளாட்சி தேர்தலில் இது எதிரொலிக்கும் - ப.சிதம்பரம்
ஆலோசனைக் கூட்டம்
மாவட்ட செயற்குழு உறுப்பினர், பாண்டி வேலு என்பவர் பேசுகையில்தான் பிரச்சினை ஆரம்பித்தது. அவர் கூறுகையில், மானாமதுரையில் காங்கிரஸ் வளரவில்லை. இதற்கு காரணம் தற்போதுள்ள நிர்வாகிகள்தான். எனவே அவர்களை மாற்ற வேண்டும். இப்போதுள்ள நிர்வாகிகள், பிற நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கட்சி கூட்டத்துக்கு கூட அழைப்பதில்லை. பூத் கமிட்டியை முறையாக அமைக்கவில்லை என்று ஆவேசமாக தெரிவித்தார்.
மேடையிலிருந்து இறங்கி வந்த ப சிதம்பரம்
இதையடுத்து அவரைத் தொடர்ந்து பேச அனுமதிக்காமல் தடுத்தனர். இதை கேட்காமல் பாண்டிவேலு தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் கோபமடைந்தார் ப.சிதம்பரம். சட்டென்று மேடையில் இருந்து இறங்கி வந்தார். பாண்டிவேலுவை மேடையில் ஏறி தனது இருக்கையில் அமர்ந்து பேசுமாறு தெரிவித்தார். தான் பாண்டிவேலு இருக்கையில் அமரப்போவதாக கூறினார்.
வாக்குவாதம்
இதனால் பாண்டிவேலு மேலும் கோபமடைந்தார். நிர்வாகிகள் கருத்துக்களை கேட்க மறுப்பதாக சிதம்பரத்தோடு வாக்குவாதம் செய்தார். அங்கிருந்த கட்சியினர் பாண்டிவேலுவை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பிறகு பேட்டியளித்த பாண்டிவேலு, ப.சிதம்பரம் என்னை பேசக் கூடாது என்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் புகார் தெரிவிப்பேன் என்றார்.
கட்சியிலிருந்து நீக்கம்
இந்த நிலையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டி வேலு அப்பொறுப்பில் இருந்து நிரந்தரமாகவும், அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து தற்காலிகமாகவும் நீக்கப்பட்டுள்ளார். பாண்டி வேலுவிடம் விளக்கம் கேட்டும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கேள்வி கேட்டு, விமர்சனங்களை முன் வைத்த காங்கிரஸ் கட்சி நிர்வாகி, கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட சம்பவம் மானாமதுரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.