சித்ரா பவுர்ணமி... வீதியெங்கும் விழா தோரணங்கள்.. மண்டகப் படிகள்-மக்கள் வெள்ளமும் வைகையில் கள்ளழகரும்
மதுரை: அக்னி வெயில் தகிக்கும் உச்சகட்ட கோடை காலம்தான்.. ஆனால் மதுரை தெருக்களில் மக்கள் திரள்தான்.. வீதி எங்கும் விழா தோரணங்களும் கொள்ளாத மக்கள் கூட்டமுமாய் கள்ளழகர் வைகையில் இறங்கும் திருவிழா காலங்களில் மாமதுரை திணறும்.
Recommended Video
சங்கம் வைத்து தமிழர் வளர்த்த மதுரை பெருநகரம்.. பொதுவாக தூங்கா நகரம் என்றழைக்கப்பட்டாலும் கள்ளழகர் திருவிழா காலம்தான் உச்சகட்ட கொண்டாட்டம். அழகர் மலையில் இருந்து கள்ளழகர் நகர்வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கி மலைக்குத் திரும்புதல்தான் மதுரை சித்திரைத் திருவிழா- கள்ளழகர் திருவிழா.
சைவம் மற்றும் வைணவம் எனும் இரு மதப் பிரிவுகளை ஒருங்கிணைக்கும் ஒரு புராண கதையின் அடிப்படையில்தான் கள்ளழகர் திருவிழா அமைகிறது. தன் தங்கை மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதை மலையில் இருக்கும் அழகர் கேள்விப்படுகிறார்.
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ரத்து.. பக்தர்கள் ஏமாற்றம்
அழகர் மதுரை பயணம்
இதனால் கள்ளழகர் திருக்கோலத்துடன் மீனாட்சியின் திருமணத்தைப் பார்க்க 24 கி . மீ தூரத்திலுள்ள மதுரையை நோக்கி பல்லக்கில் பயணிக்கிறார் அழகர். கள்ளர் திருக்கோலத்துடன் பல்லக்கில் பவனி வரும் அழகர் பல மண்டபங்களில் தங்குகிறார். அழகர் பெருமானை எதிர்கொண்டு சேவை செய்கின்றனர் மதுரை மாநகரத்து மக்கள். அப்போது கூத்துகளும் அதிர்வேட்டுகளும் விண்ணை பிளக்கும்.
அழகர் ஆற்றில் இறங்குதல்
சித்திரை பவுர்ணமி நாளில் தல்லாகுளம் பெருமாள் கோயிலிருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வைகை ஆற்றுக்கு செல்கிறார் அழகர். அப்போது ஸ்ரீவில்லிபுதூரிலிருந்து ஆண்டாளின் மாலையை சூடிக் கொள்கிறார். வெட்டி வேர் சப்பரத்திலும் ஆயிரம் பொன் சப்பரத்திலும் வைகை ஆற்றில் எழுந்தருளியருளும் அழகை மதுரை வீர ராகவப் பெருமாள் எதிர் கொண்டு அழைப்பதுதான் அழகர் ஆற்றில் இறங்குதல்.
தமுக்கம் மைதானம்
இந்த அழகர் ஆற்றில் இறங்குதல் நிகழ்வுதான் ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 9 நாட்கள் திருவிழாக நடைபெறும். அந்த காலம் முழுவதுமே மதுரை பெருநகரம் உறங்கா நகரமாக இருக்கும். ஜாதிமதம் பாகுபாடு இருக்காது.. திரும்பிய பக்கமெல்லாம் நீர் மோர் பந்தலும் அன்னதானமுமாக அமர்க்களப்படும். அழகரை சாக்காக வைத்துக் கொண்டு தமுக்கம் மைதானத்துக்குள் செல்லாமல் இருப்பவர் யாரும் இருக்க மாட்டார்கள்.
மதுரை சித்திரை பொருட்காட்சி
சித்திரை பொருட்காட்சிதான் சுற்று வட்டார கிராம மக்களுக்கான ஆண்டின் ஒரே பொழுதுபோக்கு நிகழ்வு. தமுக்கம் மைதானமே திணறிப் போய்விடும். ஒரு பெருநகரமே விழாக்கோலத்தில் மிதக்கும். மண்டகப் படி நடைபெறும் இடங்களில் விதம்விதமாய் வேடங்கள் தரித்து அத்தனை ரசனையாய் ஆட்டமும் பாட்டமும் இசைமேளங்களுமாய்....மெய்மறந்துபோகச் செய்யும் மாமதுரையின் சித்திரைப் பெருவிழா... பல லட்சம் பேர் ஒன்று திரண்டாலும் ஒரு நெரிசல்.. ஒரு அசம்பாவிதம்... ஒரு மாச்சரியம் எதுவும் இல்லாத
தமிழகத்தின் பேராச்சரியம்தான் பெருமதுரையின் போற்றுதலுக்குரிய சித்திரை திருவிழா.!