மோடி கபடி லீக் - மயிலாடுதுறையில் கபடி பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அண்ணாமலை
மதுரை: மதுரையில் நடைபெற்ற மோடி லீக் கபடி போட்டியின் இறுதியாட்டத்தில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மயிலாடுதுறையில் கபடி போட்டிக்கான உயர்தர பயிற்சி நிறுவனம் கொண்டு வரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் திமுக அரசுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறிவரும் வரும் பாஜகவினர், பல்வேறு இடங்களில் போராட்டங்களையும் நடத்தி, மக்கள் மனதில் இடம் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும், பாஜக சார்பில் மோடி லீக் கபடி போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டி, சென்னை, சேலம், கோவை, திருச்சி புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 60 இடங்களில் நடைபெற்றது. இதனையடுத்து இதில் தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்கான இறுதிசுற்று போட்டி, மதுரையில் கடந்த 27ஆம் தேதி, மதுரா கல்லூரி விளையாட்டு திடலில் நடைபெற்றது.
மக்களுக்காக வாழ்கிறது பாஜக.. விளம்பரத்துக்காக மக்கள் பணத்தை வீணடிக்கவில்லை.. குஜராத்தில் மோடி பேச்சு
கபடி இறுதிப் போட்டி
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு அணிகள் மோதியன. இதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். 3 சுற்றுகளாக நடைபெற்ற கபடி இறுதிப் போட்டியில், 29-க்கு 32 என்ற புள்ளி கணக்கில் சேலம் கிழக்கு அணி வெற்றிபெற்று, முதல் பரிசை தட்டிச்சென்றது. இரண்டாம் பரிசை சேலம் மேற்கு அணியும், மூன்றாம் பரிசை திருநெல்வேலி அணியும் பெற்றன.
வெற்றிபெற்ற அணிக்கு பரிசு
கபடி போட்டியில் வெற்றிபெற்ற சேலம் கிழக்கு அணிக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் வெற்றி கோப்பையையும், 2-ம் இடம் பிடித்த சேலம் மேற்கு அணிக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் வழங்கப்பட்டது. மேலும், 3-ம் இடம் இடம் பிடித்த திருநெல்வேலி அணிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு தொகையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார். இதனை தொடர்த்து, போட்டியில் கலந்துகொண்ட வீரர்களுக்கு நினைவு பரிசுகளை அவர் வழங்கினார்.
பரிசு தொகை அதிகரிப்பு
இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, அடுத்தாண்டு, மோடி கபடி லீக், தஞ்சாவூரில் நடைபெறும். அடுத்த ஆண்டு முதல் பரிசாக 30 லட்சம் ரூபாய் பரிசு வழங்கவுள்ளோம். இந்த ஆண்டு 60 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர், அடுத்தாண்டு 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள். இந்த போட்டியில் கலந்துகொள்பவர்களை இந்திய அணியில் இடம்பெற செய்ய வைப்போம்.
கபடிக்கான பயிற்சி நிறுவனம்
மயிலாடுதுறையில் கபடி போட்டிக்கான உயர்தர பயிற்சி நிறுவனம் நிச்சயம் கொண்டு வருவோம். ஒரு விளையாட்டு போட்டியை எப்படி நடத்த வேண்டும் என்பது போல, மோடி கபடி லீக் போட்டியை நடத்தியுள்ளோம். இந்த ஆண்டு, சரித்திர போட்டியாக நடத்தியுள்ளோம். அடுத்தாண்டு வரலாறாக இருக்கும். வெற்றிபெறும் அணியை அடுத்தகட்டத்திற்கு செல்வதற்காகதான் பரிசுத் தொகைகளை வழங்குகிறோம். போட்டியை சிறப்பாக நடத்த உதவிய மதுரை மக்களுக்கு நன்றி, தொடர்ந்து பாஜகவிற்கு ஆதரவு தாருங்கள். சோலைராஜாவிற்கு பாஜக நன்றிகடன் பட்டிருக்கிறது என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
மோடி கபடி, மோடி கபடி
முன்னதாக பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் பேசுகையில், பாஜகவை விட களத்தில் நின்று போட்டியை நடத்தியவர் சோலை ராஜா. கபடி போட்டி நியாயமாக நடைபெற்றுள்ளது. மோடி கபடி என்பது புதிய வார்த்தையாக மாறியுள்ளது. உயர்தர பயிற்சி நிறுவனம் மயிலாடுதுறையில் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இனிமேல் தமிழகத்தில் கபடி விளையாடும் போது கபடி கபடி என்று உச்சரிப்பதற்கு பதிலாக மோடி கபடி, மோடி கபடி என்று உச்சரித்து தான் விளையாடுவார்கள் என ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.