ஏ வாயை மூடு.. ஆ. ராசா பற்றி கேட்டதும் பதறி எழுந்த ஆதீனம்.. அப்போ "அப்படி" பேசினாரே.. என்னாச்சு?
மதுரை: திமுக எம்பி ஆ. ராசா குறித்த கேள்விக்கு மதுரை ஆதீனம் அரிகர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியர் இன்று பதில் அளிக்க மறுத்து கோபமாக வெளியேறினார்.
திமுக எம்பி ஆ. ராசா இந்து மதம் குறித்து பேசிய கருத்துக்கள் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1 வாரமாக தமிழ்நாடு அரசியலில் இதுதான் ஹாட் டாப்பிக்.
ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன் என்று குறிப்பிட்டார்.
இவரின் பேச்சு தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.
பரபரத்த பிரஸ் மீட்.. ஆ.ராசா பற்றி கேள்வி.. பாதி பேட்டியில் வெளியேறிய மதுரை ஆதீனம்
ஆ. ராசா
இந்த நிலையில் திமுக எம்பி ஆ. ராசா குறித்து மதுரை ஆதீனத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்வி கேட்கப்படும் போதே தலையை திருப்பிய மதுரை ஆதீனம்.. ஆஹா ஆரம்பிச்சிட்டாங்க பார்த்தீங்களா? என்றார். அதோடு தலையை இங்கும், அங்கும் திருப்பி பதற்றமாக காணப்பட்டார். அதன்பின் தொடர்ந்து கேள்வி கேட்டதும்.. நான் அதை பற்றி பேச மாட்டேன் என்று கூறினார். இன்னொரு பத்திரிகையாளர் சனாதானம் குறித்து கேட்டதற்கு.. நான் அதை குறித்து பேச முடியாது.
வம்பு விலை
அதை பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன். நீங்கள் வம்பை விலைக்கு வாங்கும் ஆட்களாக இருக்கிறீர்கள். இந்த டிவியே வேண்டாம், செல்லுங்கள், செல்லுங்கள். பார்த்தீங்களா? என்று கோபமாக கூறினார். இதையடுத்து அங்கு இருந்த செய்தியாளர், நாங்கள் கேள்வி கேட்கிறோம். நீங்கள் இல்லை என்றால் பொறுமையாக பதில் சொல்லலாம். ஆனால் ஏன் இப்படி முறையற்ற வகையில் கோபமாக பேசுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஆதீனம்.. நான் உங்களை இங்கே கூப்பிட்டேனா?
உங்களை கூப்பிடவில்லை
நான் உங்களை கூப்பிடவில்லை என்றார். அதற்கு செய்தியாளர் நீங்கள் கூப்பிடாமல் நாங்கள் எப்படி இங்கே வருவோம். செய்தியாளர் சந்திப்பிற்கு நீங்கள் தானே கூப்பிட்டீர்கள் என்று கூறினார். அதற்கு ஆதீனம்.. அதெல்லாம் பேட்டி கொடுக்க முடியாது. நான் பேச முடியாது என்று கூறினார். உடனே செய்தியாளர்கள் கோபம் அடைந்து.. அப்பறம் ஏன் எங்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று அழைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கோபமாக கேட்டனர்.
ஆதீனம்
இதையடுத்து ஆதீனத்தின் ஆட்களும் கோபமாக கத்த தொடங்கினர். ஆதீனத்திடம் கோபமாக நீங்கள் பேச கூடாது.. நீங்கள் செய்தியாளர்கள் என்று கூறினார். அதோடு.. ஏய் வாயை மூடு.. வாயை மூடு என்றும் செய்தியாளர்களிடம் ஆதீனம் ஆட்கள் கோபமாக கத்தினார். அதோடு ஆதீனம் பதில் அளிக்காமல் கோபமாக அங்கிருந்து வெளியேறினார். இதையடுத்து, தங்களை அழைத்து விட்டு பதில் அளிக்காமல் ஆதீனம் அசிங்கப்படுத்திவிட்டதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சை
அதோடு, கோவில்களில் அரசுக்கு என்ன வேலை? கோவில் அரசியல் புகுந்துவிட்டது. ஆதீனம் அரசியல் பேச கூடாது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் கோவில்களில் ஏன் அரசியல் இருக்கிறது. இந்து கோவில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த விடுவிக்க வேண்டும். இதற்காக மடாதிபதிகள், ஆதீனங்கள் கொண்ட தனி வாரியம் அமைக்க வேண்டும். அரசு கோவிலைகளில் இருந்து வெளியேற வேண்டும். கருவூலங்களைப் பார்வையிட அவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் மதுரை ஆதீனம் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் தற்போது ஆ. ராசா குறித்த கேள்விக்கு அரிகர தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியர் பதில் அளிக்க மறுத்துள்ளார்.