"4 படம் ஓடினாலே நீ முதல்வரா.." விஜய்யை மறைமுகமாக சாடிய செல்லூர் ராஜு! என்னவெல்லாம் சொன்னார் பாருங்க
மதுரை: அதிமுக சார்பில் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட செல்லூர் ராஜு, திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார். மேலும், இப்போதெல்லாம் சும்மா 4 படம் ஓடி விட்டாலே அடுத்த முதலமைச்சர் நான் என்று தற்போதுள்ள நடிகர்கள் நினைப்பதாக செல்லூர் ராஜு மறைமுகமாக விஜய்யை விமர்சித்துள்ளார்.
நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அவரை விமர்சிக்கவும் தொடங்கிவிட்டனர்.

இதற்கிடையே அதிமுக நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜு, நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதாவது மதுரை ஓபுளா படித்துறையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.
அதிமுக பொதுக்கூட்டம்: அதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய காயத்திரி ரகுராம், "போதைப் பொருள் விவகாரம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. ஏற்கனவே திமுக நிர்வாகிகள் பலர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ளனர். அதை எப்படியாவது திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே இப்போது நயன்தாரா- தனுஷ் பிரச்சனையைத் திட்டமிட்டு பெரிதாக்குகின்றனர்.
காயத்திரி ரகுராம்: தன்னை தானே சமூக நீதி காவலர்கள் என்று சொல்லிக் கொள்ளும் திமுக, இதுவரை சிறுபான்மை மக்களுக்கு என்ன செய்தார்கள்? தேர்தலுக்கு முன்பு வரை எல்லா பெண்களுக்கும் மாதாமாதம் 1000 ரூபாய் தருவோம் என்றார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் கட்சி நிர்வாகிகள், வேண்டியவர்களுக்கு மட்டும் 1000 ரூபாய் தரும் வகையில் திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 18000 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இங்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பே இல்லை.. சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி நடைபெற்று வருகிறது.. உதயநிதி ஒரு செங்கல்லை வைத்து நம்மை ஏமாற்றினார்.. அடுத்த முறை செங்கல்லுடன் தொகுதிக்கு வந்தால் நீங்களே தக்க பதிலைக் கொடுங்கள்" என்றார்.
செல்லூர் ராஜு: அதைத் தொடர்ந்து அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜு பேசினார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேச்சைத் தொடங்கினார் செல்லூர் ராஜு.. அதேநேரம் அவர் தனது பேச்சில் அதிகமாக திமுகவையே விமர்சித்தார்.
மறைமுக தாக்குதல்: அந்தக் கூட்டத்தில் செல்லூர் ராஜு மேலும் பேசுகையில், "இப்போதெல்லாம் சும்மா நாலு படம் ஓடினாலே அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு இப்போதுள்ள நடிகர்கள் வந்துவிடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மக்கள் பதில் சொல்வார்கள். இன்னொரு பக்கம் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடு பெற்று வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று கலர் கலராக போட்டோ ஷூட் நடத்துகிறார் ஸ்டாலின்.
சிரிப்பு வருகிறது: இப்போதுள்ள முதல்வரை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாக வருகிறது.. ஏதோ ஒரு நிகழ்ச்சியில், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியைத் தருகிறோம் என்கிறார்.. ஆனால், உங்க ஆட்சியில் உள்ள குறைகளைச் சொல்லக் கூட முடியாமல் தவிக்கிறோம் என்பதே உண்மை.. அவ்வளவு குறைகள் நிறைந்துள்ளன.
நிலைமை இப்படி இருக்க இப்போதே 2026 சட்டசபைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.. ஆனால், பாருங்கள் 200 தொகுதிகளிலும் நிச்சயம் திமுக டெபாசிட் இழக்கப் போகிறது. திமுக என்ற கட்சியே சீக்கிரம் அழியப் போகிறது. இவர்கள் ஆட்சி நடத்தவில்லை.. சும்மா மக்களை ஏமாற்றக் காட்சி நடத்தி வருகிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் கிரிக்கெட் கோப்பை வென்றதாக அரசையே ஏமாற்றுகிறார். தகுதி இல்லாத முதலமைச்சரைத் தேர்வு செய்தால் இப்படித்தான் நடக்கும்" என்று ஆவேசமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications