நான் ரெடி.. நீங்க ரெடியா.. வான்டடாக வந்து வண்டியில் ஏறும் ஆர்.பி.உதயகுமார்.. அமைச்சருக்கு சவால்
மதுரை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வணிக வரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் புள்ளி விவரங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று அமைச்சர் மூர்த்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.
அண்மையில் மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் மூர்த்தியின் இல்ல திருமணம் குறித்து பேசியிருந்தார். இதற்கு அமைச்சர் மூர்த்தி விளக்கம் கொடுத்து கண்டித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறிகையில், அமைச்சர் மூர்த்தி அரசியல் நாகரீகம் இல்லாமல் தரம் தாழ்ந்து பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல. நான்காம் தர மனிதரைப் போல நீ, போ, வா என்று அமைச்சர் பேசி உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பேச தார்மீக கடமை உண்டு.

ஊர் வாயை மூட முடியாது
நீங்கள் நடத்திய ஆடம்பர திருமணத்தை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். உலை வாயை மூடலாம், ஆனால் ஊர் வாயை மூட முடியாது. நீங்களே மூன்று கோடி என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள். மக்களுக்கு திட்டங்கள் என்றால் நிதிநிலை பற்றாக்குறை என்று கூறப்படுகிறது, அம்மா உணவகத்திற்கு நிதி பற்றாக்குறை, மடிக்கணினி, தாலிக்கு தங்கம் திட்டம் கேட்டால் நிதி பற்றாகுறை என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

விவாதத்திற்கு அழைப்பு
எங்கள் ஆட்சியில் கனிமவளத் துறை, வணிகவரித்துறையில் நடைபெற்ற புள்ளி விவரங்கள் குறித்து உங்களுடன் விவாதிக்க நான் தயார். கடந்த ஒன்னறை ஆண்டு காலம் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா என்று சவால் விடுத்தார்.

பின்வாங்க மாட்டோம்
தொடர்ந்து, அமைச்சர் மூர்த்தி பதவி மோகத்தில் பேசுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அப்படி எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்றால் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். ஆனால் நான்காம் தர மனிதரைப் போல் அமைச்சர் பேசக்கூடாது. நாங்கள் எதற்கும் பின்வாங்க போவதில்லை.

திருமணம் மீது விமர்சனம்
எதிர்க்கட்சி தலைவருக்கு யாரும் எழுதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மதுரையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியாரை வைத்து 120 ஜோடி ஏழை, எளிய மக்களை தேர்வு செய்து திருமணத்தை நடத்தினோம். ஆனால் நீங்கள் முதலமைச்சரை அழைத்து உங்கள் வீட்டு திருமணத்தை நடத்தி உள்ளீர்கள் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications