நவாஸ் கனி செய்த தவறு.. திருப்பரங்குன்றம் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரே காரணம்... செல்லூர் ராஜு!
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவிற்கு சென்று ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ஆய்வு நடத்தியது தவறு என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். நவாஸ் கனி சென்ற பின்னரே திருப்பரங்குன்றம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக கூறிய அவர், அதிமுக மீது திமுக பழியை போட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், திருப்பரங்குன்றம் பிரச்னைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விளக்கியிருந்தார். அதேபோல் திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் ஜனவரி 30ஆம் தேதி நடந்தது.

மதுரையை சேர்ந்த பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. அந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் திருப்பரங்குன்றம் நகரை சேர்ந்த இரு சமூகத்தினருக்கும் ஏற்கனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், அதில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என அதிமுக பிரதிநிதியை தவிர்த்து அனைவரும் ஒப்புக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.
மாவட்ட ஆட்சியரின் அறிக்கை காரணமாக அதிமுக மீது விமர்சனங்கள் அதிகரித்தது. இந்த நிலையில் மதுரையின் அதிமுக நிர்வாகிகளான ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.பி.உதயக்குமார் சார்பில் ஒருங்கிணைந்த அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜூ தலைமையிலான அதிமுகவினர், நேரடியாக அதை ஆட்சியர் சங்கீதாவிடம் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா பேசுகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையை திரும்பப்பெற வேண்டும். ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலைக்கு சென்றதால் தான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திமுக அரசு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதில்லை.
எப்போதும் நிகழ்வுக்கு பின்னரே நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதுவரை மதுரையில் மதம் தொடர்பான பிரச்சனை வந்ததே கிடையாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரை பலிகடாவாக மாற்றிவிட்டது திமுக. நாங்கள் 31 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்துள்ளோம். அதிமுக மீது வேண்டுமென்றே பழியை போட்டு திமுக உள்நோக்குடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை கேட்டு நடப்போம். வக்பு போர்டு தலைவராக இருக்கும் நவாஸ் கனி நேரடியாக ஆய்வு செய்திருக்க தேவையில்லை. பாஜக ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கையை திரும்பப்பெறவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications