மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!
மதுரை: அதிமுக சார்பாக மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் 8 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மு.க.அழகிரி ஆதரவாளரான மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மீது இரு தரப்பும் அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பாக 150 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக நேரடியாக 167 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இன்னும் 17 தொகுதிகளில் மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருக்கின்றனர். அதில் சென்னையில் மட்டும் 12 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. அதேபோல் கரூர் உள்ளிட்ட தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் புதியவர்கள் யாருக்கும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மீண்டும் செல்லூர் ராஜு, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, சரவணன், பெரியபுள்ளான், மகேந்திரன், உசிலம்பட்டி ஐ.மகேந்திரன், மாணிக்கம் ஆகியோரே போட்டியிடுகின்றனர். மதுரை மத்திய தொகுதி மற்றும் மதுரை தெற்கு தொகுதி ஆகியவற்றை புதிய நீதிக் கட்சி மற்றும் பாஜகவுக்கு ஒதுக்கி அதிமுக அறிவித்துள்ளது.
மதுரை மத்திய தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளரான பிஎம் மன்னன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து வலிமையான வேட்பாளராக பிஎம் மன்னன் இருப்பார் என்றும் அதிமுகவினர் பேசி வந்தனர். அதேபோல் எஸ்ஸார் கோபி உள்ளிட்டோரும் சிறப்பாக களப்பணியில் செயல்பட கூடியவர்கள்.
ஒரு மாதத்திற்கு முன்பாக அதிமுகவில் பிஎம் மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி ஆகியோர் இணைந்தனர். அதற்கு காரணமாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. அதுமட்டுமல்லாமல் பிஎம் மன்னனுக்கு சீட் அளிக்கப்படும் என்று உறுதியும் அதிமுக சார்பாக அளிக்கப்பட்டது. அமைச்சர் மூர்த்தி அல்லது அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக மன்னனை நிறுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் திடீரென மதுரை தெற்கு தொகுதி மற்றும் மதுரை மத்திய தொகுதி கூட்டணிக்கு சென்றுள்ளதால், மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி தரப்பில் அதிருப்தி அடைந்துள்ளது. மதுரை தெற்கு மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி ஆகியோருக்கு நல்ல செல்வாக்கு இருக்கும் நிலையில், அவர்கள் களப்பணி செய்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications