ஜன. 16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- முகூர்த்த கால் நடப்பட்டது
மதுரை: மதுரை அலங்காநல்லூரில் வரும் 16-ந் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று முகூர்த்த கால் (கால்கோள்) நடப்பட்டது.
Recommended Video

தமிழகத்தில் நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த அரசு அனுமதித்துள்ளது. இதற்கான கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.

மாடுபிடி வீரர்கள் பதிவு
இதனையடுத்து மதுரை அவனியாபுரத்தில் வரும் 14; பாலமேட்டில் 15; அலங்காநல்லூரில் 16-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனையடுத்து சனிக்கிழமை அதிகாலை முதல் 3 இடங்களிலும் மாடுபிடி வீரர்கள் தங்களை பதிவு செய்ய குவிந்தனர்.

1,368 வீரர்கள் பதிவு
வெள்ளிக்கிழமை இரவு முதலே மாடுபிடி வீரர்கள் 3 இடங்களிலும் பெரும் எண்ணிக்கையில் குவிந்தனர். மொத்தம் 1,368 மாடுபிடி வீரர்கள் தங்களை பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த மாடுபிடி வீரர்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது.

முகூர்த்த கால்
இதனிடையே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு அலங்காநல்லூரில் முத்தாலம்மன் கோவில் பீடத்தில் கால்கோள் ஊன்றும் விழா இன்று காலை தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுர்ஜித்குமார், சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், தலைமையில் மற்றும் விழா கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆண்டு தோறும் தை 3ம் தேதி அலங்காநல்லூரில் அருள்மிகு காளியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் திருவிழா உற்சவத்தை முன்னிட்டு இந்த ஜல்லிகட்டு போட்டிகள் நடத்தப்படும்.

கேலரி பணிகள் தீவிரம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளனர். இதனைத் தொடர்ந்து கால்கோள் ஊன்றபட்டு பார்வையாளர்கள் கேலரி, காளைகள் வரும் பகுதிகள் போன்ற பணிகள் இன்று தொடங்கியது.












Click it and Unblock the Notifications