சபாஷ்.. வயதோ 86; உடல்நலமும் சரியில்லை.. ஆனாலும் ஆம்புலன்சில் வந்து ஆர்வமுடன் வாக்களித்த பாட்டி!
மதுரை: மதுரையில் 86 வயது பாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையிலும் ஆம்புலன்சில் வந்து வாக்களித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
தமிழகத்தில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

ஆனால் சில மக்கள் '' நாம் ஏன் வாக்களிக்க வேண்டும், நாம் வாக்களித்து என்னவாகப் போகிறது" என்று வீட்டிலேயே இருக்க, தள்ளாத வயதிலும், உடல்நலம் குன்றிய நிலையிலும் ஆம்புலன்சில் வந்து வாக்களித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் 86 வயது பாட்டி ஒருவர்.
மதுரை ஆரப்பாளையம் டி.டி சாலையில் வசித்து வரும் இராஜமாணியம்மாள் என்ற பாட்டிதான் இவர். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வரும் இராஜமாணியம்மாள் தான் வாக்களிக்க வேண்டும் என்று குடும்பத்தினரிடம் விருப்பம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து வாக்குச்சாவடி சென்றார் இராஜமாணியம்மாள். அங்குத் தள்ளுவண்டி உதவியோடு வாக்குச்சாவடிக்குள் நுழைந்து இராஜமாணியம்மாள் தனது வாக்கினைப் மகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். பாட்டியின் இந்த செயல் அனைவரும் அவசியம் வாக்களிக்க வேண்டும் என்பதை உரைத்து கூறுவதாக இருந்தது.











Click it and Unblock the Notifications