பெண் வாக்காளர்களின் ஹிஜாப்பை அகற்ற சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம் - மேலூரில் பரபரப்பு
மேலூர் நகராட்சியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: மேலூர் நகராட்சியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண் வாக்காளர்களிடம் பாஜக முகவர் ஒருவர் ஹிஜாப்பை அகற்றி விட்டு வருமாறு சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சி முகவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் வெளியேற்றப்பட்டார்.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல முனை போட்டி உள்ளதால் வெற்றிக்காக கடுமையாக உழைத்துள்ளனர் வேட்பாளர்கள்.
திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக,அமமுக, நாம் தமிழர் கட்சி, மநீம என அனைத்து கட்சியினருமே தங்களின் சொந்த பலத்தை நிரூபிக்க தனித்து களமிறங்கியுள்ளனர். வார்டு கவுன்சிலர் தேர்தல் என்பது சட்டசபைத் தேர்தல், லோக்சபா தேர்தலை விட அதிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிஜாப்பை அகற்ற சொல்லி வாக்குவாதம்
தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 8-வது வார்டு அல் அமீன் பள்ளி வாக்கு சாவடியில் இஸ்லாமிய பெண் வாக்காளரின் ஹிஜாப்பை அகற்றி விட்டு வாக்களிக்க வருமாறு பாஜக ஏஜென்ட் கிரிராஜன் கூறினார்.

பாஜக முகவர் வெளியேற்றம்
அதற்கு அதிமுக, திமுக உள்ளிட்ட பிற பூத் ஏஜென்ட்டுகள் மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து பாஜக ஏஜென்ட் கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜனை வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்ற தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வாக்குப்பதிவு தொடர்ந்து அமைதியாக நடைபெற்று வருகிறது.

ஹிஜாப் விவகாரம்
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சர்ச்சையானது. ஹிஜாப் அணிவதற்கு எதிராக இந்து மாணவிகளும் காவி ஷால் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது. கல்லூரி ஒன்றில் தேசியக்கொடி ஏற்றும் கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றினர் ஒரு பிரிவு மாணவர்கள். பிரச்சினையை கட்டுப்படுத்தும் வகையில் ஒருவார காலம் பள்ளி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது.

தமிழகத்திலும் ஹிஜாப்
ஹிஜாப் அணிவதன் தங்களின் உரிமை என்பது இஸ்லாமிய பெண்களின் வாதம். ஹிஜாப் அணிவதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சியில் 8வது வார்டு ஒன்றில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் வாக்களிக்க வந்த போது ஹிஜாப்பை அகற்றி விட்டு வாக்களிக்குமாறு பாஜக முகவர் கிரிராஜன் என்பவர் தெரிவித்தார். இதனை ஏற்க அந்த பெண்கள் மறுத்து விட்டனர். அங்கிருந்த பிற கட்சியைச் சேர்ந்த முகவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குச்சாவடியில் பதற்றம் உருவாகவே, இதனையடுத்து வாக்குவாதம் செய்த கிரிராஜன் உடனடியாக வாக்குச்சாவடியை விட்டு வெளியேற்றப்பட்டார். மாற்று முகவர் நியமிக்கப்பட்டதால் பதற்றம் தனித்தது.












Click it and Unblock the Notifications