களைக்கனுமா, கலைக்கனுமா.. பாவம் பாஜகவினரே குழம்பிட்டாங்களே.. மதுரை ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பு
மதுரை: மதுரை மாநகராட்சியை கலைக்ககோரி பாஜகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த வேளையில் அவர்கள் ‛கலைத்திடுக' என்பதற்கு பதில் ‛களைத்திடுக' என தமிழில் எழுத்து பிழையுடன் கொண்ட பதாகைகளை ஏந்தி இருந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
கடந்த ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் மதுரை மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ள நிலையில் 67 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று தனித்து மாநகராட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
இதற்கு அடுத்தப்படியாக அதிமுக 15 வார்டுகளிலும், காங்கிரஸ் 5 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 வர்டுகளிலும், மதிமுக 3 வார்டுகளிலும், விசிக, பாஜக தலா ஒரு வார்டுகளிலும், சுயேச்சைகள் 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
இதுக்கு எண்டே இல்லையா.. மீண்டும் களேபரமான டெல்லி மாநகராட்சி அவை கூட்டம்..மேயர் தேர்தல் ஒத்திவைப்பு
மதுரை மாநகராட்சிக்கு பாஜக எதிர்ப்பு
மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து மேயராக 57வது வார்டு கவுன்சிலர் இந்திராணி பொன்வசந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் மதுரை மாநகராட்சி சார்பில் எந்த பணிகளும் செய்யப்படவில்லை. நிர்வாகம் சரியில்லை. இதனால் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கலைத்திட வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்து வருகிறது.
கலைத்திடக்கோரி ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் தான் மதுரை மாநகராட்சியை கலைத்திட வேண்டும் எனக்கூறி இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பாஜக நிர்வாகிகள் மாநகராட்சியை கலைத்திடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செயல்படாத மதுரை மாநகராட்சியை கலைத்திட வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.
எழுத்துப்பிழையுடன் ஆர்ப்பாட்டம்
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைகளில் பாதாகைகள் ஏந்தி இருந்தனர். அந்த பதாகைகளில் ‛‛செயல்படாத மதுரை மாநகராட்சியை கலைத்திட வேண்டும். வேண்டாம்.. வேண்டாம்.. மதுரை மாநகராட்சி வேண்டாம்'' என வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதில் ‛கலைத்திடுக' என்பதற்கு பதில் ‛களைத்திடுக' என எழுத்துப்பிழையுடன் பதாகைகளை அவர்கள் வைத்திருந்தனர்.
போட்டோ-வீடியோவால் சலசலப்பு
இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் எழுத்து பிழையுடன் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. முன்னதாக மதுரை மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்ற பாஜக கவுன்சிலர் பூமா மாநகராட்சியை கலைக்ககோரி கோஷம் எழுப்பினார். இதற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்கோஷம் எழுப்பியதால் அங்கும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.