மகளிர் கல்லூரியில் அத்துமீறிய இளைஞர்கள்.. மிரண்ட மதுரை.. காரணம் என்ன தெரியுமா? பாஜக பிரமுகர் கடுகடு
மதுரை: மதுரை தல்லாக்குளத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரி முன்பு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தனது மகளை அழைத்து செல்ல வந்த தந்தை ஒருவரையும் அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ரகளை செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மதுதான் காரணம் எனவும், அரசு மது விற்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்
நேற்று (நவ.04) மாலை மதுரை மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லூரி வழியாக அமரர் ஊர்த்தி ஒன்று சென்றிருக்கிறது. அந்த வழியாக சென்ற இளைஞர்கள் சிலர் இந்த ஊர்த்தியை மறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ஆபாசமான வார்தைகளை சத்தமாக கூறிக்கொண்டே மகளிர் கல்லூரிக்குள்ளும் நுழைந்துள்ளனர். அங்கு தனது மகளை அழைக்க வந்த முதியவர் ஒருவர் இளைஞர்களை பார்த்து சத்தம் போட்டுள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் திடீரென முதியவரை தாக்கியுள்ளனர்.

குற்றச்சாட்டு
இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் இந்த தாக்குதல் சம்பவத்துடன் நிற்காமல் மாணவிகளிடமும் கலாட்டா செய்ய தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் 6 பேரை காவல்துறை கைது செய்தது. இளைஞர்களின் இந்த அத்துமீறலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு மதுதான் காரணம் என்றும், அரசு மது விற்பதால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியுள்ளார்.

மது போதை
இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியுள்ளதாவது, "மதுரை அரசு மகளிர் கல்லூரி வாசலில் சென்று கொண்டிருந்த அமரர் ஊர்தி முன்பாக மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை ஒரு சாதாரண சம்பவமாக புறந்தள்ள முடியாது, அவர்களின் ஆபாச நடனம் மற்றும் அருவருக்கத்தக்க சொற்களை பொறுக்க முடியாமல் தவித்ததையடுத்து தட்டி கேட்ட ஒருவரை கண்மூடித்தனமாக அந்த குடிகார வன்முறை கும்பல் தாக்கியது தமிழகம் மிக மோசமான திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

நடமாட முடியாத சூழல்
ஒழுக்கம், பண்பு, மாண்பு, மரியாதை, நாகரீகம், கட்டுப்பாடு என எல்லாவற்றையும் உதறித்தள்ளும் கொடிய அரக்கனாக, உந்து சக்தியாக டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் விளங்கி கொண்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. அரசே மதுவை விற்கும் அவளை நிலையினால் தான் இக்கொடூர சம்பவங்கள் நிகழ்கின்றன எனபதை யாராலும் மறுக்க முடியாது. இதே நிலை நீடித்தால், பொது மக்கள் அச்சமின்றி தெருவில் நடமாட முடியாத சூழ்நிலை விரைவில் உருவாகி விடுமோ என அஞ்சத்தோன்றுகிறது.

காவல்துறை
சட்டத்தை மதிக்க வேண்டியதில்லை என்ற மனநிலை மக்களிடம் பெருகிவருவது சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பதோடு, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போகும் நிலை உருவாகும். சமூக கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து, எப்படி வேண்டுமானாலும் வாழலாம், நம்மை தட்டி கேட்க யாருமில்லை என்ற அகம்பாவ எண்ணம் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தினால் தான் பெருகி வருகிறது. அரசியல் அழுத்தங்களுக்கு ஆளாகாமல் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக இரும்புக்கரம் கொண்டு கண்டித்து, தண்டிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக காவல்துறைக்கு உள்ளது.

அரசியல் கட்சிகள்
அதே போல் இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டிய ஆசிரியர்களுக்கும் இந்த கடமை உள்ளது. ஆனால்,கல்வி வியாபாரமாகி விட்ட நிலையில்,ஆசிரியர் பணியில் சேர்வதற்கு கூட பல லட்சம் லஞ்சம் கொடுத்து, வாங்கி கொண்டிருக்கும் சூழ்நிலை நிலவும் இக்காலகட்டத்தில் தூய்மையான இளைய சமுதாயத்தை உருவாக்க முடியுமா என்பது கேள்வி குறியே! இது போன்ற சட்ட விதி மீறல்களில் ஈடுபடுவோருக்கு, அரசியல்வாதிகள் தான் பெரும்பாலும் ஆதரவு கரம் நீட்டுகிறார்கள். விரைந்து பிரபலமடைவதற்கும், பொருளீட்டுவதற்கும் குறுக்கு வழியில் பயணம் செய்ய துடித்து கொண்டிருக்கிறார்கள் பலர். அந்த நபர்களை பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் அடையாளம் கண்டு ஒதுக்குவதன் மூலம் தான் கட்டுபாடுள்ள, ஒழுக்கமான அடுத்த தலைமுறையை உருவாக்க முடியும்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications