கமகமக்க தயாரான காலை உணவு.. குஷியில் தொண்டர்கள்! மெனு என்ன? ஆஹா இத்தனை பேர் சமைக்கிறார்களா?
மதுரை: மதுரை மாவட்டம் வளையங்குளத்தில் அதிமுக பொன்விழா மாநில மாநாடு இன்று நடைபெறும் நிலையில், இதில் பங்கேற்க உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு காலை உணவு கமகமக்க தயாராகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை யார் கைப்பற்றுவதென கடுமையான போட்டி நடைபெற்றது. இதில் எடப்பாடி தரப்பு சட்ட ரீதியாக வெற்றிபெற்று கட்சியை தன்வசப்படுத்தியுள்ளது. அதேபோல மக்கள் மத்தியிலும் தன்னை கட்சியின் ஒரே தலைமையாக நிலைநிறுத்திக்கொள்ள எடப்பாடி பழனிசாமி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சியின் ஓர் பகுதியாக இன்று மதுரையில் அதிமுக பொன்விழா மாநில மாநாடு நடைபெறுகிறது.

எடப்பாடியுடன் ஒப்பிடும்போது தென் மண்டலத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா தரப்புக்கு தான் அதிக வாக்கு வங்கி இருக்கிறது. எனவே இந்த வாக்கு வங்கியை தன் பக்கம் திருப்பவும் இந்த மாநாட்டை அவர் பயன்படுத்த இருக்கிறார். எனவே இந்த மாநாடு அரசியல் வட்டாரத்தில் அதிக கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா தரப்பினர் இந்த மாநாட்டை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
மட்டுமல்லாது தங்களது ஆதரவாளர்கள் யாரும் இந்த மாநாட்டுக்கு போக கூடாது என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். மறுபுறம் பாஜக மேலிடமும் இந்த மாநாட்டை கவனித்து வருகிறது. பாஜக மாநில தலைவர் தொடர்ச்சியாக அதிமுக மீது விமர்சனத்தை வைத்து வருகிறார். என்னதான் கூட்டணியில் இருந்தாலும் கூட இந்த விமர்சனங்கள் நின்றபாடில்லை. எனவே மதுரையில் எடப்பாடிக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்பதை பாஜக மேலிடம் கவனித்து வருகிறது.

இத்தனை சவால்களுக்கு மத்தியில் மாநாட்டை சிறப்பாக நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 3 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் 60 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டின் திடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநாட்டுக்கு வரும் அனைவருக்கும் தடபுடலான விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சுமார் 5000 சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூன்று வேளை உணவையும் தயாரித்து வருகிறார்கள். தற்போது காலை உணவு சமைத்து முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 8.45 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரிலிருந்து சுமார் 600 கிலோ மலர்கள் தூவப்பட்டன. காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு தீரமானங்கள் இயற்றப்பட இருக்கின்றன.












Click it and Unblock the Notifications