கோவை கார் வெடிப்பு.. ”முதல்வரே” எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் பேசுங்கள்.. ஆர்பி உதயகுமார்!
மதுரை: கோவை கார் வெடிப்பு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் கலைத்து பதில் அளிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கோவை கார் வெடி விபத்து தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது வேர்விட்டிருக்கிற தீவிரவாதம், பயங்கரவாதம் தடுத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் கார் குண்டுவெடிப்பா, சிலிண்டர் வெடிப்பா என்ற விவாதம் தாண்டி பயங்கரவாதத்தின் தொடக்கத்தில் இருந்து தமிழகம் தப்பித்து பிழைத்துள்ளது என்பதுதான் உண்மை.
பசும்பொன்னுக்கு வந்து பார்க்கட்டும்.. ஆர்பி உதயகுமார், எடப்பாடிக்கு சவால் விட்ட ஓபிஎஸ் டீம் எம்எல்ஏ!
மக்கள் பாதுகாப்பு
உங்கள் கூட்டணியிலுள்ள கட்சியில் இருக்கிறவர்கள் வேண்டுமானால் இந்த நடவடிக்கையை அவர்கள் உங்களுடைய தயவுக்காக அவர்களுடைய பார்வை வேண்டுமானால் இதில் வேறுபடலாம். பொதுவான பார்வை, நியாயமான பார்வையை வெளிப்படுத்துவதோடு, பாதுகாப்பு மக்களுக்கு வழங்க வேண்டும். பயங்கரவாதத்தால் கல்வி சீரழியும், பயங்கரவாதத்தால் பொருளாதாரம் சீரழியும், பயங்கரவாதத்தால் எதிர்காலம் சீரழியும், பயங்கரவாதத்தால் பசி பஞ்சம் பட்டினி நிலை உருவாகும்.
அரசுக்கு கவனம் தேவை
அதனால்தான் இன்றைக்கு மக்கள் வேதனையோடு, கண்ணீர் வடித்துக் கொண்டு இந்த அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதை குற்றச்சாட்டாக அரசு பார்க்க கூடாது. இது தங்கள் மீது சுமத்துகிற குற்றச்சாட்டாக அரசு பார்க்குமானால் உண்மை நிலையை அறிவதற்கு அரசு தவறிவிடுகிற ஒரு நிலைமை உண்டாகும். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு பொறுப்பேற்றது முதல் சட்ட ஒழுங்கை காப்பாற்ற கோட்டை விடுகிறார்கள் என்பதை ஆதாரத்தோடு சட்டமன்றத்தில் எடுத்துச் சொல்லி, கவனமாக அரசு கையாள வேண்டும் என்று கூறினார்.
பதில் கூறுவதில்லை
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது எந்த ஆதாரம் இல்லாமல், சாட்சி இல்லாமல், வெற்று விளம்பரத்திற்காக குற்றச்சாட்டை கூற வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் இலக்கணமாக வைத்து, நீங்கள் நடத்திய 40 ஆயிரம் போராட்டங்களை எடப்பாடி பழனிசாமி முறியடித்துக் காட்டி, அத்தனைக்கும் ஒருவரி விடாமல் பதில் சொன்னார். ஆனால் நீங்கள் எதற்கும் பதில் சொல்வதில்லை.
முதல்வர் பதில் எங்கே?
கோவை குண்டு வெடிப்பிற்கு எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு இதுவரை நீங்கள் பதில் கூறவில்லை. பதில் சொல்லாமல் வாய் மூடி மௌனியாக இருப்பது, பயங்கரவாதத்தை வேடிக்கை பார்க்கிற ஒரு நிலைமை வந்திருக்கிறதே, பயங்கரவாதத்தால் பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்திலேயே ஏற்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணம், முதலமைச்சர் பதில் சொல்லாத ஒன்றே தான் காரணம், நீங்கள் பதில் சொன்னால் அதிகாரிகள் விழிப்போடு இருப்பார்கள்.
பயங்கரவாதம்
கோவையில் நடைபெற்றது பயங்கரவாதம் தான். அதில் ஈடுபட்ட அந்த நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத சம்பவங்களோடும், பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு இருப்பது என்பது விசாரணையில் தெள்ளத் தெளிவாக தெரிந்திருக்கிறது. மத்திய அரசு கொடுத்த பட்டியலிலே பயங்கரவாத தொடர்பில் உள்ள பட்டியல்களில் இதில் ஈடுபட்ட அவர்களுடைய பெயரும் அதில் இருந்தது என்பது வெளிப்படையாக இன்றைக்கு எல்லோரும் அறிந்து செய்தியாக இருக்கிறது.
மு.க.ஸ்டாலின் மவுனம்?
முதலமைச்சர் மௌனத்தை கலைத்து கேள்விக்கு விடை சொன்னால் தான் இந்த நாட்டிலே நிர்வாகம் சரியாக இருக்கும். தற்போது வேண்டுமானால் நீங்கள் மருத்துவ ஆலோசனையில் மருத்துவ கண்காணிப்பிலே இருக்கலாம். பொதுவான நேரங்களில் இந்த நிர்வாகத்தை செயல்படுத்துகிற நிர்வாகத்தை தலைமை தாங்கும் முதலமைச்சர். எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு உரிய பதில் தந்தால் அந்த ஒவ்வொரு பதிலும் இந்த நாட்டினுடைய நன்மை இருக்கிறது என்பதை முதலமைச்சர் மறந்துவிடக்கூடாது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.