எங்கே இருக்கு? நட்டா சொன்ன மதுரை எய்ம்ஸை காணோம்! காலி சைட்டில்.. பதாகைகளுடன் தேடிய 2 எம்பிக்கள்!
மதுரை: இரண்டு நாட்கள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி நாட்டா, காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
நேற்று இரவு அவர் பேசிய கருத்துக்கு தற்போது தொடர் எதிர் வினைகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாக கூறியிருந்தார்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் இது குறித்து ஆய் மேற்கொண்டு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
மதுரை எய்ம்ஸ் செங்கல் கூட இல்லை.. 95% பணி முடிந்ததா? ஜேபி நட்டாவின் பச்சை பொய்- எம்.பிக்கள் காட்டம்
வெறும் சேர்கள்
தமிழ்நாடு வந்திருந்த நட்டா நேற்றிரவு காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து சிறப்புரையாற்றிய அவர் இந்த கூட்டத்தை பார்க்கும்போது தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலம் தெளிவாக தெரிகிறது என்று கூறியிருந்தார். ஆனால் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பலர் நைசாக கலைந்து சென்றுவிட்டனர். இதனால் நட்டா பேசுகையில் கூட்டத்தினர் இல்லாமல் வெறும் சேர்கள் மட்டுமே இருந்தன.
விமர்சனம்
இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் நட்டா கூறிய பல கருத்துக்களுக்கு தற்போது எதிர்வினைகள் கிளம்பியுள்ளன. நட்டா திமுகவை வாரிசு கட்சி என்றும், திமுகவில் முன்பு கருணாநிதி இருந்தார். இப்போது ஸ்டாலின் வந்துள்ளார். அடுத்து அவரது மகன் வருவார். இது என்ன மாதிரியான ஜனநாயகம்? ஸ்டாலினால் வளர்ச்சியை பற்றி பேச முடியுமா? DMK வில் D என்றால் Dyanasty (வாரிசு), M என்றால் Money (பணம்), K என்றால் கட்ட பஞ்சாயத்து. இதுதான் திமுக என்று விமர்சித்திருந்தார்.
கல்வி
மேலும் நீட் குறித்து பேசிய அவர், இந்த தேர்வு அனைவருக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய தேர்வு. நீட் தேர்வு மூலம் கிராமப்புறங்களிலிருந்தும், பல்வேறு பிரிவுகளிலிருந்தும் மாணவர்கள் மருத்துவர்களாக உருவாகிறார்கள். ஆனால் இந்த தேர்வை திமுக எதிர்க்கிறது. திமுகவில் உள்ளவர்கள் படிக்காதவர்கள் எனவேதான் இந்த தேர்வை எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு கல்வி பற்றி தெரியவில்லை. என்று கூறியிருந்தார். இதற்கு சரமாரியான பதிலடி கொடுக்கப்பட்டிருந்தது.
எய்ம்ஸ்
தற்போது இதனைத் தொடர்ந்து, மற்றொரு விஷயத்திற்கும் திமுக மற்றும் சிபிஎம் எம்.பிக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். அதாவது, நட்டா பேசும்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 95% முடிந்துவிட்டதாக கூறியிருந்தார். இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
வெறும் நிலம் மட்டும்
இந்த ஆய்வில் அவர்கள் 95% கட்டி முடிக்கப்பட்ட எய்ம்ஸ் எங்கே? என்கிற பதாகைகளை ஏந்தியிருந்தனர். பின்னர் டிவிட்டரில் இது குறித்து பதிவிட்டிருந்த சு.வெங்கடேசன், "பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகிதம் கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிடத்தை தேடி நானும் மாணிக்கம் தாகூர் எம்பியும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி வெற்றிலை போட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம்." என்று பதிவிட்டுள்ளார்.
கிணத்தை காணல
மாணிக்கம் தாகூர் தனது பங்கிற்கு, "டியர் நட்டா ஜி, எய்ம்ஸ் மருத்துவமனையின் 95% கட்டுமானங்களை முடித்ததற்கு நன்றி. நானும் எம்பி சு.வெங்கடேசனும் தோப்பூர் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் தேடி பார்த்தோம் ஆனால் எந்த கட்டிடமும் இல்லையே? கட்டிடத்தை யாரோ திருடிவிட்டார்கள் போல..." என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான படங்கள் டிவிட்டரில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.