உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி... பிரேமலதா விஜயகாந்த் என்ன சொல்கிறார்
உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தெரிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை: விலைவாசி உயர்வைக் கண்டித்து ஜூலை 5ஆம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம் நடத்தும் என அக்கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவால் மறைந்த தேமுதிக நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்
பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றார்.
இந்த விலைவாசி உயர்வு பொதுமக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது என்று கூறினார்.

தேமுதிக வலுவான கட்சி
அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், தேமுதிகவை பொறுத்தவரையில் வெற்றியைக் கண்டு ஆணவப்படுவதோ, தோல்வியைக் கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல என்றும் பிரேமலதா தெரிவித்தார்.
வலுவான கட்டமைப்புகளை உள்ளடக்கிய வலுவான கட்சி தேமுதிக.

யாருடன் கூட்டணி
கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதற்கு நிறைய பணிகளை செய்து கொண்டிருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முதலில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்த பின்பு கட்சியின் ஆலோசனை கூட்டம் கூட்டி தேமுதிக கட்சியின் நிலையை தலைமை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

என்றைக்கும் நட்பு
மு.க ஸ்டாலின், விஜயகாந்த் உடனான நட்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா, எங்களது திருமணம் கருணாநிதி தலைமையில் நடந்தது இந்த உலகத்துக்கே தெரியும். தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனான நட்புறவு என்றைக்கும் இருக்கும் என்றார்.

தனிப்பட்ட விசயம்
சசிகலா அரசியலுக்கு வருவது பற்றி ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சசிகலாவின் ஆடியோ ரிலீஸ் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா, சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசுவது அக்கட்சியின் தனிப்பட்ட விஷயம், அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது என்றும் கூறினார்.

அரசு முடிவு செய்யும்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி இந்தியாவில் மூன்றாம் ஆய்வு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த சசிகலா, ஸ்புட்னிக் தடுப்பூசி ஆய்வில் திருப்திகரம் இல்லாமல் இருந்திருக்கலாம் நமது மக்களுக்கு எந்த தடுப்பூசி கொடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications