டெல்லி கொடுத்த சிக்னல்.. அதிமுகவின் 3வது சக்தி எடப்பாடி தான்.. அடித்து சொல்லிய ஆர்பி உதயகுமார்!
மதுரை: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பின் அதிமுகவின் மூன்றாவது சக்தியாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துவிட்டதாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்டத்துறை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் முதல் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சத்திலேயே இருக்கிறது. ஒரு பக்கம் ஓ பன்னீர் செல்வம் மாவட்டச் செயலாளர் கூட்டத்தை நடத்த, மறுபக்கம் அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியுள்ளார்.
இதனால் இரு தரப்பிலும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய சட்டத்துறை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆர்பி உதயகுமார் பேட்டி
இந்த விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கோரி, மத்திய அரசினுடைய சட்ட ஆணையம், அதிமுகவின் கருத்துக்களை கேட்கும் வகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர்கள்
மத்திய சட்ட ஆணையத்தின் இந்த கடிதம் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கும் இன்றைய நாளில், மிகப்பெரிய மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ருதுராஜ், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் கடிதத்தை அனுப்பி உள்ளார்.

இபிஎஸ் உரிமைக்குரல்
பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து, முதல்முதலாக உரிமைக் குரல் எழுப்பி, மக்களுக்கு கரும்பை வழங்குவதோடு, அரசை நம்பி செங்கரும்பை விதைத்திருக்கிற விவசாயிகள் வாழ்விலே ஒளி ஏற்றுகின்ற வகையிலே அரசே கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், ரூ.5,000 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவின் 3வது சக்தி
எடப்பாடி பழனிசாமியின் மக்கள் பணிக்கு கிடைத்துள்ள வெற்றிக்காக, இன்றைக்கு விவசாயிகளும், பொதுமக்களும் மனமகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்து வருகின்றனர். மத்திய சட்ட ஆணையகத்தின் கடிதம் மூலம் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பின் அதிமுகவின் மூன்றாவது பெரிய சக்தியாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications