என்டிஏ ஆட்சியா? அதிமுக ஆட்சியா? தொடரும் குழப்பம்.. மோடி, எடப்பாடி பழனிசாமியின் வெவ்வேறு பேச்சு!
மதுரை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி பேசிய போது, அதிமுக ஆட்சி அமைக்கும் என்று கூறி இருந்தார். இருவரும் வெவ்வேறு வகையில் பேசி இருப்பதால், கட்சி நிர்வாகிகளிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மதுரையில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், ஜிகே வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் அத்தனை தலைவர்களும் பங்கேற்றனர். இதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், என்டிஏ கூட்டணி 210 தொகுதிகளில் வென்று, அதிமுக ஆட்சி அமைக்கும்.

அதற்கு தென் மாவட்டங்கள் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். இதன்பின் பிரதமர் மோடி பேசுகையில், தமிழுக்கும், மணக்கும் மல்லிகைக்கு மதுரை பெயர் பெற்ற ஊராகும். தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தல் திருப்புமுனையாக இருக்கும் என்பதை மக்கள் நிரூபிப்பார்கள். என்டிஏ கூட்டணியே மாற்றத்தை கொண்டு வரும் என்று தமிழக மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.
அதேபோல் தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் என்டிஏ ஆட்சியே அமையும் என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சி என்றும், பிரதமர் மோடி என்டிஏ ஆட்சி என்றும் பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி என்டிஏ ஆட்சி அமையும் என்றே பேசி இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அதிமுக என்ற பெயரையே பிரதமர் மோடி சொல்லவில்லை. இந்த முறையும் கூட பிரதமர் மோடி அதிமுக பெயரை தவிர்த்துள்ளார். அதேபோல் கடந்த முறை இந்தியில் பேசிய பிரதமர் மோடி, இம்முறை ஆங்கிலத்தில் உரையாற்ற தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே என்டிஏ ஆட்சி அமையும்.. பாஜகவில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள் என்று நயினார் நாகேந்திரன் பேசி இருந்தார்.
இதனால் அதிமுக - பாஜக இடையில் இன்னும் கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா? என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்யவில்லை என்று விவாதம் தொடங்கி இருக்கிறது. அதேபோல் பிரதமர் மோடியின் பேச்சு காரணமாக கூட்டத்தில் இருந்த அதிமுகவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications