இதை நிரூபிச்சா அரசியலை விட்டே விலக தயார்.. நீங்க ரெடியா? - அமைச்சர் பிடிஆருக்கு செல்லூர் ராஜூ சவால்!
மதுரை : அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் ரூ.15,000 கோடி ஊழல் நடந்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டிய நிலையில், "அதனை நிரூபித்தால் நான் அரசியல் விட்டு விலக தயார். நிரூபிக்கவில்லை எனில் அவர் விலக தயாரா?" என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன் ஊழல் நடந்திருந்தால் நிரூபிக்கட்டும் என்றும், தகுதி இல்லாதவரை திமுக அரசு நிதி அமைச்சராக நியமனம் செய்துள்ளது என்றும் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
திமுக அரசு வரி மேல் வரி விதித்து மக்களைப் பாடுபடுத்தி வருகிறது. இப்படி வரி மேல் வரி விதிப்பதற்குக் காரணமே நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மாங்கா பறிச்சிட்டு இருந்தாரா?
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஆட்சியில் இருந்தபோது விதிகளை மீறி பலருக்கு ஓய்வூதியம் அளித்ததாக நிதி அமைச்சர் பிடிஆர் குற்றம்சாட்டியது பற்றிய கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஓய்வூதியத்தை பலருக்கு நிறுத்திவிட்டார்கள் என சட்டமன்றத்திலேயே பலமுறை குற்றம்சாட்டி பேசி இருக்கிறார்கள். அப்போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாங்காய் பறிக்கச் சென்றிருந்தாரா?

ஏமாற்றிவிட்டார்கள்
உரியவர்களுக்கு தானே உதவித்தொகை கொடுக்கப்பட்டது. அதென்ன அமைச்சர்களாகப் பார்த்துக் கொடுப்பதா? முறைப்படி தான் வழங்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதியானவர்களை தேர்வு செய்து ஓய்வூதியம், உதவித்தொகை கொடுக்கப்பட்டது. திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1,500 ரூபாய் உதவித்தொகை கொடுப்போம் எனக் கூறிவிட்டு, தற்போது உதவித்தொகையை லட்சக்கணக்கானோருக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் பிடிஆருக்கு சவால்
கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15,000 கோடி ஊழல் நடந்திருக்கிறது என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார். இதை நிரூபித்தால் நான் அரசியல் விட்டு விலகத் தயார். நிரூபிக்கவில்லை என்றால் நிதியமைச்சர் விலகத் தயாரா? நிதி அமைச்சருக்கான தகுதியே இல்லாத ஒருவரை திமுக அரசு நிதி அமைச்சராகப் போட்டு வரி மேல் வரி விதித்து மக்களைப் பாடுபடுத்தி வருகிறது.

காரணமே நிதி அமைச்சர் தான்
இப்படி வரி மேல் வரி விதிப்பதற்குக் காரணமே நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தான். திமுக அரசு மீது இந்த ஒன்றரை ஆண்டுகளில் மக்களுக்கு வெறுப்பு வந்ததற்குக் காரணமே நிதி அமைச்சர் தான். நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன், நான் அமைச்சராகப் பொறுப்பு வகித்த கூட்டுறவு துறையில் ரூ.15,000 கோடி முறைகேடு நடந்ததை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்.

எதன் அடிப்படையில்?
எதன் அடிப்படையில் கூட்டுறவு துறையில் ரூ.15,000 கோடி முறைகேடு என அமைச்சர் சொல்கிறார்? துறையில் இருக்கும் பதிவாளர்களை கேட்டாரா? ஆலோசனை நடத்தினாரா? எந்தெந்த மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்தது என கணக்கெடுத்தாரா? எந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் நிதி அமைச்சர் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications