சத்துணவுத் திட்டம் ! - 100 ஆண்டுகள் கடந்து வந்த அசத்தல் பாதை
மதுரை: அண்ணாவின் பிறந்தநாளான இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது கனவுத் திட்டமான 'காலை சிற்றுண்டித் திட்டத்தை' மதுரையிலுள்ள நெல்பேட்டையில் தொடங்கி வைத்தார். அதற்கு முன்பாக அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு மதுரை மாநகராட்சியில் செயல்பட உள்ள மொத்தம் 26 பள்ளிகளுக்கு உணவுகளை விநியோகிக்கக் கூடிய வாகனங்களைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். மொத்தம் பத்து வாகனங்கள் இதற்காகப் பயன்படுத்த உள்ளன.
அதற்குமுன்னதாக பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தைச் சென்று பார்வையிட்டார். அங்கே தயாராகும் உணவை உண்டு பரிசோதித்தார்.
பின் திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது அருகே அமர்ந்திருந்த மாணவிக்கு அவரே உணவை ஊட்டிவிட்டார். பின் அருகிலிருந்த மாணவனுக்கு உணவை ஊட்டினார்.
மேலும் பல குழந்தைகளுக்கு அவரே உணவைப் பரிமாறினார். இந்த நிகழ்வின் போது அமைச்சர் கீதா ஜீவன் முதல்வருடன் சேர்ந்து உணவைப் பரிமாறினார்.
அதன்பிறகு தொடக்கவிழாவில் ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், "நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர் பிட்டி தியாகராயர் அவர்கள் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்க தீர்மானம் நிறைவேற்றிய ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு நாம் காலை உணவு வழங்கும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.
“இனிமேல் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல்வர் ஸ்டாலினோடு சேர்த்து இரண்டு தாய்” அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி
சர் பிட்டி தியாகராயர் காலத்திலிருந்து பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச சத்துணவுத் திட்டம் எப்படிக் கடந்து வந்துள்ளது எனப் பார்க்கலாம்.
இந்தத் திட்டம் முதன்முதலாக 1922 ஆண்டு சென்னை மாநகராட்சியின் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சோதனை முயற்சியாக தொடங்கப்பட்டது. அதன்பிறகுதான் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக உணவளிக்கும் முறை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதன் பிறகு 1925 ஆம் ஆண்டு இத்திட்டம் சென்னை மாநகராட்சி முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
1956 இல் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
1962இல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் மதிய உணவுத் திட்டப் பயனாளர்களாக இணைக்கப்பட்டனர். இதனால் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இத்திட்டம் அடுத்தகட்டத்திற்கு விரிவடைந்து பரவலாகப் போய்ச் சேர்ந்தது.
1982 ஆம் ஆண்டு ஐந்து வயது முதல் 9 வயது வரை பள்ளிக்குச் செல்லும் ஏழைக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
1984 ஆம் ஆண்டு 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
1989 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்குச் செல்லும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இரு வாரங்களுக்கு ஒரு முறை முட்டை வழங்கும் திட்டம் இதன் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டது.
1997 ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு முக்கியப் பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று இனிப்பு பொங்கல் வழங்கும் திட்டம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது.
1998 ஆம் ஆண்டு 2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
உப்புமா, கிச்சடி, பொங்கல்.. அரசு பள்ளிகளில் அசத்தலான காலை சிற்றுண்டி..எத்தனை வகைகள் தெரியுமா?
2006 ஆம் ஆண்டு 2 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் இருமுறை முட்டை வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
2007 ஆம் ஆண்டு 2 வயது முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2010 ஆண்டு 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை வழங்கும் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
2014 ஆம் ஆண்டு முதல் பயனாளிகளுக்குப் பலவகை கலவை சாதம் மசாலா முட்டையுடன் வழங்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு முதல் அதாவது ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பு ஏற்றபிறகு இந்தத் திட்டம் பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டமாக மாற்றமடைந்துள்ளது.
ஆக, 1922இல் சிறு அளவில் சென்னையில் ஒரு பகுதியில் மட்டும் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் இன்று 100 ஆண்டுகளைக் கடந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படும் மாபெரும் திட்டமாக மலர்ந்துள்ளது.
ஆகவேதான் ஸ்டாலின்,"இந்நாள் என் வாழ்வின் பொன்னாள்" என்று கூறியுள்ளார். அதற்குப் பின்னல் இவ்வளவு பெரிய வரலாறு உள்ளது. மேலும் அவர் இத்திட்டம் பற்றிக் கூறும் போது ""பள்ளிக்குப் பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்குச் செல்லும் வாய்ப்பை நாம் ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்" என்றும் நெகிழ்வாகக் குறிப்பிட்டுள்ளார்.