கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா?... கமலுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
மதுரை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் முன்ஜாமீன் மனு மீதான வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.
தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க கூடாது என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் மோகன்ராஜை ஆதரித்து, பள்ளப்பட்டியில் இரு தினங்களுக்கு முன்பு, கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசினார்.

பெரும் சர்ச்சை
கமல்ஹாசனின் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமலின் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கமல்ஹாசனுக்கு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன் ஜாமீன் கோரி மனு
அரவக்குறிச்சி காவல்நிலையத்தில், கமல்ஹாசன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வேறு அடையாளம் இல்லையா?
இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி, கோட்சேவுக்கு இந்து என்பதை தவிர வேறு அடையாளம் இல்லையா? என்று கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு, கோட்சேவை பற்றி மட்டுமே பேசிய நிலையில் இந்துக்கள் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை; கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பொது வாழ்வுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறாக பகிரப்படுகிறது என கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்படலாம்
கமல்ஹாசன் மீது இதுவரை 71 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்த தமிழக அரசு, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற கருத்து தொடர்பான வழக்கில் கமல்ஹாசனின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் கைது செய்யப்படலாம் என்றும் தெரிவித்தது.

விவாதிக்க கூடாது
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், ஊடகங்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார். மேலும், தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications