மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழை - பெருக்கெடுத்த வெள்ளம்
தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை: நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
Recommended Video
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் 26, 27 ஆகிய தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.
அதே சமயம் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர், வங்கக்கடலில் இன்று உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாற வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார்.
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்க்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிககனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்திருந்தது.
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
மழை அளவை பொருத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை முதலே திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருச்செந்தூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலும் இன்று மதியம் முதல் அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரைநாள் விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.